பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 29



இறைவா, மற்றவர்க்குச் சங்கடம் தரும் உண்மையினைச் சொல்லாத நெறி நிற்க, அருள் செய்க!

இறைவா! உண்மையுமாய், இன்மையுமாய் விளங்கும் இறைவா! உண்மையைச் சொல்லத்தான் ஆசைப்படுகிறேன்! ஆனால், அச்சம், உண்மை சொல்வதைத் தடை செய்கிறது! இறைவா, என்ன அச்சம் என்றா கேட்கிறாய்?

நான் உண்மையென்று நினைப்பதைக் கூறினால் பலருக்கு நெஞ்சினை உறுத்தும், வருத்தமுறச் செய்யும் என்று எண்ணுகிறேன்! இறைவா! ஆம் இறைவா, அதுவும் கூட உண்மைதான்! அவர்களால் நமக்குத் தீங்கு நேர்ந்தால் என்ன செய்வது என்ற தயக்கம்! இறைவா, இவ்வகையான அச்சம் கோழைகளினுடையதா?

தீங்குவரும் என்று கருதித் தீங்கு செய்யாமை அறமன்று! தீங்கு செய்யக்கூடாது என்பதற்காகவே தீங்கு செய்யா திருப்பதுதான் அறம், ஒழுக்கம் வாய்மை நெறி! ஆம் இறைவா, உண்மையைச் சொல்லாது போனால் பொய்ம் மையை எப்படி நீக்குவது?

ஒரு தீமையை நீக்கப் பிறிதொரு தீமை செய்வது அறமன்று; வாழ்வியல் நெறியுமன்று! தீமைக்குத் தீமை என்றால் தீமையின் வட்டமே சுழன்று கொண்டிருக்கும். பொய்ம்மையை - பொய்ம்மையுடையவரை அணுகி வாய்மை நெறி காட்டிப் (பொய்ம்மையைக் காட்டாமல்) பழகினாலே பொய்ம்மை அகலும்!

"பையத் தாழுருவி” என்ற திருவாசகம் நினைவுக்கு வருகிறது. "பொய்ம்மையும் வாய்மையிடத்த" என்றார் திருவள்ளுவர்! ஆதலால் இறைவா! நான் உண்மையைத் தேட அருள் செய்க! ஆனால், மற்றவர்க்குச் சங்கடம் தரும் உண்மையினைச் சொல்லாமை என்ற நெறி நிற்க அருள் செய்க!