பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 12


உண்மையாக நடந்திடும் உள்ளத்தினைத் தந்தருள்க!


இறைவா, முன்னைப் பழைமைக்கும் பழைமையனே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே! அறிவில் புதுமை தேடலாம், படைப்பில் புதுமை தேடலாம்.

ஆனால், அன்பில் புதுமை உண்டா? அன்பு செய்வோரில் மாற்றம் வேண்டும். இறைவா, அன்பில் பழமை ஏது புதுமை ஏது? ஆனால் இறைவா, புதுமை என்ற பெயரில் நான் பல தவறுகளைச் செய்கிறேன்! இறைவா, எல்லாவற்றிலும் புதுமை நாடல் பைத்தியக்காரத்தனம்! எனக்கு இருப்பதில் மனநிறைவு இல்லை. இந்தப் பெரிய பிழையிலிருந்து என்னைக் காப்பாற்று, நான் எனக்கு வாய்த்தவர்களிடமெல்லாம் உண்மையாக நடந்து கொள்ளும் உள்ளத்தினைத் தந்தருள் செய்க! மனிதர்களில் புதியவர்களைத தேடுதல் வேண்டாம்! அன்பில் பழைய அன்பு-புதிய அன்பு என்ற வேற்றுமை இல்லை.

அலையும் மனத்தினை அடக்கி ஆண்டிடும் ஆளுமையைத் தந்தருள் செய்க! பொறிகளை நல்ல நெறியில் பயிற்றிப் பயன்கொள்ளும் பாங்கினைத் தந்தருள் செய்க! பழையோனே! பழைய அடியாரோடு கூட்டுவித்து வாழ்வித்திடு. இறைவா, அருள் செய்க!