பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 14


வாழைபோல் வாழ அருள்க!


இறைவா! அழகு, பூரணத்துவத்தின் பொலிவு இல்லையா? இறைவா நீ அழகன்! நின் படைப்புகள் எல்லாம் அழகுடையன. இயற்கையில் கிடக்கும் அழகுப் பொலிவை, கைபுனைந்தியற்றாக் கவின்மிகு வனப்பை என்னென்று புகழ்வது போற்றுவது. வாச மலரெலாம் வண்ணக் களஞ்சியம் அல்லவா! இறைவா, வாழ்க்கையின் மங்கல நிகழ்ச்சி களுக்கெல்லாம் வாழை மரம் கட்டுதல், வாழைப்பழம் படைத்தற் சடங்குண்டு. இறைவா, இது ஏன்?

இறைவா, வாழைமரத்தின் தத்துவ விளக்கம் அருமை யாக இருக்கிறது. இறைவா, ஒழுங்காக அடுக்கப் பெற்ற வாழைமட்டைகள். பிசிறே இல்லாத வழுவழுப்பு. முறையாக அடுக்கிவைத்த வாழைத்தார். இறைவா, வாழையின் அமைப்பு, ஒழுங்கை உணர்த்துகிறது.

இறைவா, இவ்வளவு அழகை இரசித்து அனுபவிக்கும் நான் ஏன் அழகைப் படைக்க மறுக்கிறேன்? அழகை வளர்க்கவும்கூட ஆசைப்படுவதில்லையே. இறைவா, என் வாழ்க்கையில் ஒழுங்குகள் இல்லையாயின் நான் எப்படித் திருத்தமுறச் செய்ய முடியும்? திருத்தமுறச் செய்ய இயலாத நிலையில் ஏது பூரணத்துவம்? பூரணத்துவம் இல்லாத நிலையில் அழகு ஏது? நான் பூரணத்துவம் அடையாத நிலையில் பரிபூரணனாகிய உன்னை அடைதல் எங்ஙணம்?

இறைவா, இந்தப் பரந்த உலகில் இயற்கையில் எங்கு நோக்கினும் ஒழுங்குகள். முறை பிறழாத நிகழ்ச்சிகள்! நின்னை உபாசிப்பது என்றால் அழகை உபாசிக்க வேண்டும். ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும்! நோன்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதானே நின்னருள் கிடைக்கும். எதையும் திருத்தமுறச் செய்ய, அழகுறச் செய்ய இறைவா, அருள் செய்!