பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 16


கண்களுக்கு அறிவுக் காட்சியினைக் கற்றுத் தருக!


இறைவா, கண்ணுதற் பெருமானே! உனக்கு மூன்று கண்கள். கண்ணின் அருமையும் பயனும் அறிந்து மூன்றாகக் கொண்டனையோ? எனக்கு மட்டும் இரண்டே கண்கள். ஏன் இந்தப் பாரபட்சம்! இறைவா, எனது இரண்டு கண்களே கூட என்னோடு ஒத்துழைப்பதில்லை. கண்ணினால் எனக்கு ஆக்கம் இல்லை! இறைவா, ஏன் இந்த அவலம். காணாதன வெல்லாம் காணும் ஆர்வம் என் கண்ணுக்கு இல்லை. பொறி களுக்குத் துணையாக அமைந்து ஏவல் செய்யும் என் கண்களைத் திறந்திடுக!


என் கண்களுக்கு அறிவுக்காட்சியினைக் கற்றுத்தருக. நின் திருக்கோலத்தைக்காணும் பேற்றினை அருள்செய்க! கண்களே நல்வாழ்க்கையின் வாயில்கள். இறைவா, அருள்,செய்க!

கூர்த்த மதியோடு கூடிய காட்சியைக் காணப்பயிற்சி தருக என் ஆன்மாவின் அருள் நிலையை மற்றவர்க்கு உணர்த்தும் கண்களாக விளங்க அருள் செய்க!

எனக்கு ஆகாதனவற்றைக் கண்ணினாலே பார்த்து ஒதுக்கும் ஆற்றலினைத் தந்தருள் செய்க!இறைவா, என் கண்கள் பொருள் நலம் பெற்றுப் பொலிவுறுதல் வேண்டும். ஒளிமிக்க கண்களாக விளக்கமுற வேண்டும். இறைவா, அருள் செய்க!