பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




ஜனவரி 18.


வாய்மை நலம் தழுவிய வாழ்வினை அருள்க!


இறைவா! வாயில் பிறப்பது வாய்மை, வாய், சொல்லுவதற்காக உரியது அல்ல. வாய், உடலின் மற்ற உறுப்புகளுக்கும் கூட உணர்வினை வழங்கும் வாயிலாகும்.

எல்லா உறுப்புகளுக்கும் ஆசிரியன் போல விளங்கி நல்வாழ்க்கை நல்க வேண்டிய கடமை வாய்க்கு உண்டு!

உடலின் மேலாண்மைக்கும் வாயே பொறுப்பு. நாவடங்கினால் நோய் இல்லை; நாவடங்கினால் சமூகத்தில் கலவரம் இல்லை. வாய் இயற்றும் உண்பதற்குரிய பணி, ஒரு பகுதிப் பணியே யாம். வாய், பேசும் பணியும் செய்கிறது. சிரிப்பது ஒரோ வழி! முற்றிலும் தற்சார்பான நிலையில் பேசலாம். ஆனால், பெரும்பாலும் செவிக்குணவை வழங்கும் வினாக்களைத் தொடுப்பதே வாயின் முதற்பணி!

வாய், ஏன்? எதனால்? எப்படி? என்ற வினாக்களைத் தொடுத்து ஆய்வுணர்வை வளர்க்க வேண்டும். அறிவு வினாக்களைத் தொடுத்து விளக்கம் பெறுவதே வாயின் தலையாய பணி. இறைவா, ஏன்? எதனால்? எப்படி? என்ற வினாக்களைத் தொடுக்கக் கற்றுக் தந்து அருள் செய்க. இறைவா, என் வினாக்களுக்குரிய விடைகளைக் கூறி அறிவைப் புலப்படுத்தும் பணியையும் செய்ய நீயே அருள் செய்க வாய்மை நலம் தழுவிய வாழ்க்கையை அருள்க!