பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

35



ஜனவரி 19


நின்னைப் போற்றும் வாழ்க்கையை அருள்க!


இறைவா, என் வாழ்க்கையைப் பொருளுடையதாகச் செய்ய வேண்டும் புண்ணியனே. என் வாழ்க்கை மற்றவர் வாழ்க்கைக்குப் பொருளாகி, முதலாகி நிற்கும்பேற்றினை அருள் செய்க!

பொருள் என்றால் குறுகிய நிலையில் கொச்சைப்படுத்திப் பணமே பொருள் என்று ஆக்கிய கொடுமையிலிருந்து இறைவா, என்னைக் காப்பாற்று! வாழ்க்கையை முழுமைப்படுத்தும் தகுதியுடைய அனைத்தும் பொருளே. செவி நுகர் கனிகளும் பொருளே! இறைவா, நீயே வாழ்க்கைக்குப் பொருள் அல்லவா? அதுவும் செம்பொருள் அல்லவா? நின்னைப் பெற்று வைத்த பொருள் நமக்கு ஆம் என்று வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்! இறைவா, அருள் செய்க! என் ஆன்மாவிற்கு அறிவினால் ஒளியூட்டும் கல்வியைப் பொருள் எனத் தந்தருள் செய்க.

இறைவா, என் வாழ்க்கையின் உடைமைப் பொருளாக, உன்னை எனக்குத் தந்தருள் செய்க. நீயே என் உடல், ஆவி, பொருள் அனைத்தும். நின்னைப் போற்றி என் வாழ்க்கையையும் பொருளுடைதாகச் செய்து கொள்ளும் பேற்றினைத் தந்தருள் செய்க!