பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 20


புதுமை வேட்டல் தவமாகட்டும்


இறைவா! முன்னைப் பழமைக்கும் பழைமையாய், பின்னைப் புதுமைக்குப் பேர்த்தும் அப்பெற்றியதாய் விளங்கும் இறைவா, எனது வாழ்க்கை தேங்கிக் கிடக்கிறது. என் வாழ்க்கையில் மாற்றங்கள் இல்லை. இல்லை, மாற-மறுக்கிறேன். பழக்கம் தவிரப் பழகும் முனைப்பு இல்லை. இறைவா, என் கதி என்னாவது? நின் கருணை என்பால் படக்கூடாதா? விரைந்து அருள் செய்க! நீ, அடிபட்டுக் கொண்டு மாணிக்கவாசகரை ஆட்கொண்டாய். தெருவில் நடந்தும் எய்த்து அலைந்தும் ஆரூரரை ஆட்கொண்ட அருளாள, என் பொருட்டு நீ அல்லற்பட வேண்டாம். எனக்குத் தண்டனை கொடு. காலனைக் காலால் உதைத்ததைப் போல என்னை உதைத்திடு, என் பிழையைத் திருத்து! பிழையெலாம் தவிரப் பணித்தருள் செய்க!

என் உள்ளம், மாற்றங்களை விரும்பத்தக்கதாக வளர அருள் செய்க! மாற்றங்கள் இல்லாதது அழிந்து போகும். நான் அழியத் திருவுள்ளமா? இறைவா, காப்பாற்று. நாள் தோறும் புதுமையை விரும்பி முயன்று நடத்தும் வாழ்க்கையை அருள் செய்க! புதுமை வேட்டலே எனது தவமாகட்டும். வளரும் செடிகளில் புதிய தளிர்கள்-அரும்புகள்! அதுபோல என் வாழ்க்கையில் புதிய எண்ணங்கள், புதிய புதிய முயற்சிகள் தோன்ற வேண்டும். இறைவா, அருள் செய்க!