பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

37



ஜனவரி 21


வாழ்க்கை சிறக்க மகிழ்வு தேவை!


இறைவா, குமிண் சிரிப்பினையுடைய ஆடல் வல்லானே! வாழ்க்கை சிறக்க மகிழ்வு தேவை! மகிழ்ச்சி, கடைச் சரக்கன்று! மகிழ்ச்சி, புறத்தே உள்ள பொருள்களிலும் இல்லை! ஆம்! இறைவா! என் உள்ளம் மகிழ்தல் வேண்டும்! "என் மனம்தான் நரகத்தையும் படைக்கிறது! சொர்க்கத்தையும் படைக்கிறது"! இது கவிஞன் மில்டனின் வாக்கு. இறைவா! மகிழ்தல் என்பது உள்ளத்து நிறைவைப் பொறுத்தது! இன்றைய வாழ்வு நிகழ்வுகளின் தோல்விகள், வெற்றிகள், இழப்புகள்-சட்டங்கள் இவற்றைக் கணக்குப் பார்க்க வேண்டும். மறுநாள், தோல்விகளை வெற்றிகளாக்கும் முயற்சி தேவை! இழப்புகளை ஈட்டங்களாக்கும் முயற்சி தேவை!

ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் மனவருத்தம், கவலை கொள்ளுதல் கூடாது. மனத்துன்பம் நிறைந்த வாழ்க்கை மோசமானது; அருவருக்கத்தக்கது. இறைவா, என்னை மன வருத்தத்திலிருந்து காப்பாற்று! என் மனக்கவலையை மாற்று. நான் மகிழ்ச்சியாக இருக்கும் வரத்தினைத் தா!

இன்றைய அறிவார்ந்த மகிழ்ச்சியே நாளைய முயற்சிக்கு வித்து! இறைவா, சிரித்து மகிழ்ந்து வாழும் வாழ்க்கையை அருள் செய்க! செடிகளில் மலர்கள் சிரித்து வாழ்கின்றன! எதிர் காலத்தை நினைந்து நினைந்து ஏங்குவதில்லை! என் வாழ்வும் மகிழ்ச்சியாக அமைய வேண்டும்! நான் மகிழ வேண்டும்! இறைவா, அருள் செய்க!