பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

41



ஜனவரி 25


இறைவா, நீ என்னைக் கைவிடாதே


இறைவா, முப்புரம் எரித்த முதல்வா! என்னே உனது முரண்பட்ட திருவிளையாடல்! கருணைக் கடலாகவும் விளங்குகின்றனை! அதே போழ்து முப்புரத்தையும் எரித்துள்ளனை! ஆம், இறைவா, கருணையும் தேவை! அதே போழ்து உறுதியும் தேவை! கருணை மறவர்களாக வாழ்தல் வேண்டும்!

இறைவா, எனது அன்பு உனது அருளைக் கடலாக்குகிறது! எனது அடாதநிலை உன்னைச் சினப்படுத்தி விடுகிறது! ஆணவத்தின் உருவமாக நின்று நின்னை மதிக்காத நிலை, பொய் மாய மயக்கம், செயல் வீரம் ஆகியன என்னைத் தலையால் நடக்கச் செய்திடும் போது நீ என்னை ஒறுத்தாளுகின்றனை! இறைவா, நீ எனக்குத் தரும் தண்டனைகள் என்னை வாழ்விப்பனவேயாம்! என்னைப் புளியம் வளாரினால் அடித்தாலும் நான் ஏற்பேன்! உடன்பட்டே நின்று நினக்கு ஆட்செய்வேன்!

ஆனால், இறைவா! ஒரு வேண்டுகோள்! நீ பாராமுகமாக மட்டும் இருந்து விடாதே! அன்னியனைப் போல நோக்காதே! நீ என்னை உடைமையாகக் கொண்டவன்; நான் உனக்குப் பணி செய்பவன்! உன்னையே நினைந்து நினைந்து ஆவி கழிக்கும் விருப்பமுடையவன்! நீ என்னைக் கை விடாதே! நீ என்னைத் துடைத்தாலும் போகேன்! உனக்குத் தொழும்பாய் ஆட்பட்டிருப்பதே என் விருப்பம்! ஏற்றுக் கொள்க! அருள் செய்க!