பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

43



ஜனவரி 27


அன்பில் கசிந்துருகும் நிலையை அருள் செய்க!


இறைவா! வாழ்வாங்கு வாழ்வதும் ஒரு கலையே! இறைவா! வாழ்வாங்கு வாழும் கலையைத் கற்றுத்தா! இனிய சொற்களைப் பேசுதல் எளிமையான காரியமா? மற்றவர்களை மதித்தல் எளிதில் வரக்கூடிய பழக்கமா? மற்றவர்களுடைய அவமதிப்பைத் தாங்கிக்கொண்டு அன்பு செய்யும் ஆற்றல் எளிதில் வரக்கூடியதா? இறைவா, இந்த அரிய வாழ்க்கைக் கலைகள், வாழ்க்கையில் வந்து பொருந்த அருள் செய்யக்கூடாதா? இறைவா, இவை கற்றுத் தருவனவும் இறக்குமதி செய்வனவும் அல்ல என்கிறாயோ? இறைவா, இவற்றை வாழ்க்கையில் முயற்சி செய்து அடைய வேண்டும்! மனம் குழைந்தால் இனிய சொற்கள் தோன்றும். இரும்பு மனத்தை நாள்தோறும் அன்பின் நனைத்துக் குழைத்துப் பக்குவப்படுத்திக் கொள்ளும் ஆற்றலை அருள் செய்க!

இனிய மனத்தில்-குழைந்த உள்ளத்தில் இனிய சொல் தோன்றும்! அன்புக்குப் பகையான தற்செருக்கு, தன்னல நயப்பு வேண்டவே வேண்டாம்! எளியமனம், தாழ்வெனும் தன்மை, பணிவு எனும் பண்பு-இவையே என் வாழ்க்கையின் அணிகலன்களாக அமைந்து விளங்க அருள் செய்க!

எப்போதும் என்மனம் அன்பில் கசிந்துருகும் நிலையை அருள் செய்க. எனது அன்பே! அருள் செய்க.