பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

45



ஜனவரி 29


உயிரின் தரத்தை உயர்த்தி அருள்க!


இறைவா, அடித்து அடித்து அக்காரம் தீற்றும் என் துணைவா! நாடகத்தால் உன்னடியார் போல நடிக்கிறேன்! நடிப்பிலாவது உண்மை உள்ளதா? இல்லையே! "நான், எனது” என்ற நச்சுப் பாம்புகள் என்னைக் கடித்துவிட்டன! என் உடல் முழுதும் நஞ்சுபரவி, அதே நஞ்சை என்னைச் சுற்றியுள்ள பொருள்களின் மீதும் பரவ விடுகிறேன்! எங்குப் பார்த்தாலும் "நான்” என்ற வெறியாட்டம்! என் நிலம், என் வீடு, என் கோயில் என்ற வெறியாட்டம்!

இறைவா, இந்த நஞ்சனைய வாழ்க்கையை எப்போது மாற்றுவது! இன்றா? நேற்றா? பிறப்புத் தொடங்கிய காலந் தொட்டுச் செய்தவினைகள் என்னை ஆட்கொண்டுள்ளன! ஆடுகிறேன்! பாடுகிறேன்! இறைவா, இந்தப் படுமோசமான நிலை போதும்! இனி படமுடியாது துயரம்! கருணை காட்டுக! நான் நடிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும்! "நான்", "எனது" என்ற நச்சுப் பாம்புகளிடமிருந்து விடுதலை பெற வேண்டும்! முன்னை வினையின் முடிச்சுகளை அவிழ்த்திடுதல் வேண்டும்! இறைவா, இந்த வரங்களை அருள் செய்க! என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் அடி! என் உயிரின் தரத்தை உயர்த்தி அருள் செய்க!