பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

47






ஜனவரி 31


அன்பே, அன்பே என்று அரற்றி அழ ஆசைப்படுகிறேன்!


இறைவா! கண்ணப்பர் அன்பினை ஆரத்துய்த்த அண்ணலே! கண்ணப்பர் கண்களை ஏற்று உகந்த தலைவனே! ஆசாரம் பிழைத்ததற்காகக் கண்களை ஏற்று உகந்தாயோ? அல்லது உன் தேவைக்கு உகந்தாயா? அல்லது கண்ணப்பரின் அன்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்காக உகந்தாயா? இறைவா, உனக்கு ஏது ஆசாரம்? உனக்கு உரிய ஒரே ஆசாரம் அன்பேதான்!

இன்று எங்குப் பார்த்தாலும் வேதம், ஆகமம், சாத்திரங்களின் பெயரால் பொய்யான ஆசாரங்கள் அரங்கேறுகின்றன! ஆசாரத்தின் மறைவில் சாதிமுறைகள் ஆட்சி செய்கின்றன! இறைவா! நான் உனக்கு ஆசாரபூசை பண்ணேன்! யாதொரு சடங்கும் செய்யேன்! இறைவா, என்னைச் சிங்காரித்து என் அழகைக் காணாமல் உன்னைச் சிங்காரித்து உன் அழகைக்காண ஆசைப்படுகிறேன்!

எனக்கு நீ இந்த வரத்தினைத் தந்தருள்செய்க! "என்னுடைய அன்பே! அன்பே!” என்று அரற்றி அழ ஆசைப்படுகிறேன்! ஊனெலாம் நின்றுருக அழவேண்டும்! அன்பினில் விளைந்த ஆரமுதே, மாணிக்க வாசகரிடம் பெற்ற அன்புக் கடலில் ஒரு திவலையைத் தந்தருள் செய்க கண்ணப்பரின் அன்பில் ஒரு பகுதியை எனக்கும் அளித்தருள் செய்யும்படி கண்ணப்பருக்குப் பரிந்துரை செய்து திருமுகம் கொடுத்தருள் செய்க! அன்பிலே நின்னைக் காண ஆசைப்பட்டேன்! அருள் செய்க!