பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




பிப்ரவரி 5


கோபம் அற்ற குணம் நிறைந்த வாழ்க்கையை அருள்க!


இறைவா! முப்புரம் எரித்த முதல்வா! இன்று என்னைக் கடுமையான சினம் ஆட்கொண்டுவிட்டது. இறைவா, கோபம் சண்டாள குணம் என்கின்றனர். ஆனால் கோபத்தைத் தவிர்க்கவே முடியவில்லை. ஏன் இறைவா, நீ, மூண்ட சினத்தால் முப்புரம் எரிக்க வில்லையா? காமனை எரித்துச் சுடவில்லையா? காலனைக் காலால் உதைக்க வில்லையா? இறைவா, உனக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? அப்படியா இறைவா! முப்புரத்தை நீ எரிக்க வில்லையா? அது அறிஞர்களின் கற்பனையா? ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மூன்று தீமைகளைத்தான் சுட்டெரித்தனையா? இந்த மூன்றும் சுட்டெரிக்கத் தக்கனவே! அவற்றுள்ளும் ஆணவம் மிகவும் ஆபத்தானது. தன் முனைப்பிலேயே-எப்போதும் குடிகாரனைப் போல மயக்க நிலையிலேயே ஆழ்த்துவது. யார் மாட்டும் அன்பு, பணிவு காட்ட அனுமதிக்காது. எல்லாம் தனக்கே எனக்கருதும்; அறியாமையின் மொத்த வடிவம், அறிந்தது போலக் காட்டும். இந்தப் பொல்லாத ஆணவம் கெட்டாலே அனைத்தும் நன்றாக நடக்கும். இறைவா, உன் கோபம் ஆணவத்தைச் சுட்டெரித்த கோபம். அதுவும் என் ஆணவத்தைச் சுட்டெ ரித்த கோபம்! நின் கோபம் வளர்க! வாழ்க!

ஆனால், என் கோபமும் முற்றாகக் கெட்டவர்கள் மீது அல்ல. நல்லவர்கள், உழைப்பாளிகள், முயற்சி செய்யாத சாதாரண மக்கள் மீது! இது நல்லதல்ல. மன்னித்துக் கொள். கோபம் அற்ற குணம் நிறைந்த வாழ்க்கையை அருள் செய்க!