பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

53




பிப்ரவரி 6


ஆண்டவனே என் பொறிகளின் மீது ஆணை செலுத்தும்
ஆற்றலைத் தா!


இறைவா, பழநியில் ஆண்டிக் கோலத்தில் நிற்கிறாய்! இறைவா, இஃதென்ன திருக்கோலம். நின் திருக்கோலம் துறவை நினைவூட்டுகிறதா? அல்லது ஆள்பவன்-ஆண்டவன் -ஆண்டி என்ற நினைவைத் தருகிறதா? ஆம். இறைவா! எனக்கும் ஆளத் தெரியும். நிலத்தை ஆள்வேன். ஆனால் இறைவா என்னை மட்டும் நான் ஆண்டு கொள்ள மாட்டேன். மிகமிகச் சாதாரணமான என் பொறிகள் என்னை ஆட்டிப்படைக்கின்றன. ஏன்? சோம்பலையும் தூக்கத்தையும் கூட நான் வென்று ஆண்டதில்லை, சுக போதையினால் அவற்றை வெல்ல நினைத்ததும் இல்லை!

இறைவா, தன்னை ஆய்பவன் ஆண்டி நீ ஆள்பவனாக, ஆண்டவனாக, ஆண்டியாக நிற்கிறாய். நின்திருக்கோலம் மானுடத்திற்கு மருந்து. ஆம், ஆணவப்பேய் பிடித்து அலையும் மானுடத்திற்கு நீயே மருந்து பொருள்கள் வாழ்க்கைக்காகப் பொறிகள் துய்த்து மகிழ்ந்து இன்புற்று வாழ்வதற்காக, ஆனால் இவை வரம்பு கடக்கும் பொழுது வாழ்க்கை, வாழ்க்கையாக அமைவதில்லை. அதனை நின் திருக்கோலத்தில் காண்கிறேன். இறைவா, என் பொறிகளின் மீது ஆணை செலுத்தும் ஆற்றலைத்தா! அருள் செய்!