பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பிப்ரவரி 9


ஏழையேன் முகம் பார்த்து இரங்கி அருள்க!

இறைவா! இது என்ன நின் திருவிளையாட்டா? அல்லது உலகியலின் போக்கில் ஒரு காலத்தில் சராசரி மனிதர் செய்வதற்கு நாணிய-ஒளிவு மறைவாகச் செய்த தவறுகள் இன்று ஒழுக்கங்களாக மாறிவிட்டனவே. காசின்றிக் காரியம் எதுவுமே நடக்காது என்ற நிலை நியதியாகிவிட்டதே. பொய்ம்மை அரங்கேறுகிறதே. சிறுமையே எங்கும் சீராகப் போற்றப்படுகிறதே. இது என்ன இறைவா! நான் என்ன செய்ய? இறைவா, என்னைக் காப்பாற்று. பேராசையியின்றும் காப்பாற்று. அதிகாரத் திமிரினின்றும் காப்பாற்று. எல்லா உயிர்களிடத்தும் அன்பாகப் பழகும் வரம் கொடு!

அன்பெனும் பிடியுள் அகப்படும் ஆண்டவனே! என் முகம் பார். நான் ஓர் ஏழை நாளும் ஐம்பொறிகளுக்கும் ஐம்புலன்களுக்கும் ஏவல் செய்து பிழைப்பு நடத்தும் ஏழை. என்னைக் காப்பாற்று. நான் புண்ணிய வாழ்க்கை நடத்த வேண்டும். ஞானம் பெறுதல் வேண்டும். எப்போதும் நின் சந்நிதியிலேயே தவம் கிடக்க வேண்டும். இறைவா, இந்த வரத்தைக் கொடு! இறைவா, என்னைக் காப்பாற்று.