பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

57




பிப்ரவரி 10


ஆசையை விட்டேன்; அன்பால் ஆட்பட்டேன்.


இறைவா, இறைவா! ஏன் நினது அருள் மன்னுயிர்த் தொகுதியின் மேல் பூரணமாகப் பாலிக்கப்படவில்லை? நாங்கள் உனக்குக் கட்டிய ஆலயங்களுக்குக் குறைவில்லையே! ஏன்? கொட்டு முழக்குடன் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் ஏராளமாக நடத்துகின்றோமே. உன்னைப் பற்றியே சித்திரித்துக் கொண்டிருப்பவரின் எண்ணிக்கை அற்பமல்லவே. இறைவா.

இறைவா, நின்கோலங்களும் அடையாளங்களும் ஆயிரம் ஆயிரமாக வளர்ந்துள்ளனவே! இறைவா, இவற்றால் என்ன பயன் என்றா கேட்கிறாய்? இறைவா, உனக்கு மனக் கோயில் வேண்டும். பின் ஆற்றல் மிக்க அன்பால் உன்னை அழைக்க வேண்டும். இறைவா, இஃதென்ன சோதனை. என்மனம் என்வசம்கூட இல்லையே. என் மனம் பொறிகளின் வழியே சுற்றித் திரிகின்றதே. அன்பு, எதன்எதன் மீதோ செல்கிறது. இறைவா, என்னிடம் அன்பே இல்லையா? ஆசைதான் இருக்கிறதா? ஆம் இறைவா, ஆசைப்படுவது தவறா? தவறல்ல. ஆனால் ஆசை அன்பாக மாற வேண்டும். ஆசை தற்சார்புடையது. அன்பு பிறர்நலச்சார்புடையது; தியாகத் தன்மையுடையது. இறைவா, இன்றுமுதல் உனக்கு என் மனக்கோயிலில் இடமுண்டு. இல்லை, நீ மட்டுமேதான் என் மனக்கோயிலில் இருப்பாய். ஆசையை விட்டேன், அன்பால் ஆட்பட்டேன் இறைவா, காத்தருள்க!