பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




பிப்ரவரி 11


பெருவாழ்வு வாழ்ந்திட அருள் செய்க!


இறைவா! நீ கருணையால் அளித்த வாய்ப்புகளை நான் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முயன்றும் முடியவில்லை. ஆனால் ஆசை மட்டும் குறையவில்லை. திரும்பத் திரும்ப உன்னுடைய கருணையை வேண்ட நின் சந்நிதியில் வந்து நிற்கிறேன். மன்னித்துக்கொள். அருள் பாலித்திடுக! வாய்ப்புகள் எளிதில் வருவன அல்ல.

ஆனால் என் வாழ்க்கையில் நின் கருணையால் நான் பெற்றவை அளப்பில! “என்னால் அறியாப்பதம் தந்தாய், உன்னால் ஒன்றும் குறை இல்லை! ஆனால் ஆண்டுக் கணக்கில் மூப்பு உடையேன். தன்மையால் பேதமை உடையேன். தங்கக் கிண்ணத்தைக் கொடுத்து, விளையாடுதற்கு மரப்பாச்சி வாங்கிய குழந்தையிலும் பேதமையுடையவன் யான்! இறைவா, அருள் செய்க! பேதமை நீக்கி ஆட்கொண்டருள்க! நின் அருமை அறிந்து போற்றும் பெற்றிமையை அருள் செய்க! நான் இப்பிறப்பிலேயே பெரு வாழ்வு வாழ்ந்திட அருள் செய்க! நின் அருள் போற்றியே வாழ்ந்திடுவேன். அருள் செய்க!