பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






பிப்ரவரி 15


தன்னலமற்ற வாழ்வினைத் தருக!


இறைவா! உறுப்புகளை மறைத்து ஆடைகள் உடுத்தி நாகரிகமானவன் என்று நாடகம் நடத்தி வருகிறேன். ஆனால் உணர்வுகளோ நாகரிகமானவையல்ல. இறைவா! எனது சமூக நிலைக்கு இசையாத உணர்வுகளை நான் மறக்கக்கற்றுக் கொண்டேனில்லை. "ஜாரவா" பழங்குடி மக்களோ உறுப்புகளை மறைத்தார்களில்லை. ஆடையின்றி அம்மணமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பால் தன்னலம் இல்லை. கூட்டு வாழ்க்கை இருக்கிறது. நானோ நிர்வாணமான தன்னலத்துடன் வாழ்கிறேன்.

"நான்” என்ற உணர்வு அற்ற நிலையில்தானே அன்பு அரும்பும்; ஒப்புரவு நிலையில்தானே ஒழுக்கம் கால் கொள்ளும் நின் அருள் கிடைக்கும். இறைவா அருள் செய்க. 'நான்', 'எனது' அற்ற நிலையில் நின் திருவடிக் காட்சியில் திளைத்து வாழ்ந்திட அருள் செய்க!