பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

71






பிப்ரவரி 24


"வா என்று வான் கருணை காட்டு”


இறைவா! இன்று உன்கருணை எல்லையற்றதாக இருந்தது. ஆம்! இன்று காலை தனித்திருந்தேன். அமைதியான உள்ளத்துடன் நின்னிடம் உறவு கொண்டேன். அம்மம்ம! எவ்வளவு இன்பமாக இருந்தது. இன்றே போல் என்றும் நீ, என்னிடம் பேசக்கூடாதா? என்னுடன் கலந்திருக்கக் கூடாதா? உன்னைக் கேட்பானேன்! நீ எப்போதும் தான் காத்திருக்கிறாய், நான் தானே கவனிப்பதில்லை. நான் கவனிக்காது போனால் என்னவாம். ஈர்த்து என்னை ஆட்கொண்டால் உனக்கென்ன குறை வந்துவிடும்.

என்னை ஆட்கொள்ளுதல் நின் கடமையல்லவா? இறைவா! எங்கெங்கோ புறத்தே போகிறேன். இறைவா மன்னித்துக்கொள்! "வா” என்று வான் கருணை கலந்த அழைப்பினைக்கொடு. ஈர்த்து ஆட்கொள்க என் புத்தியினுள் புகுந்து என் புத்தியையே திருத்தி ஆட்கொள்க. நின்னொடு கலந்து இன்புறும் இனிய வாழ்க்கையினை அருள்செய்க!