பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






பிப்ரவரி 25


பிறர்க்கென முயலும் பெற்றியைத் தா!


இறைவா! நீ ஒரு நல்ல வியாபாரி. நான் உன்னை நினைந்து அருச்சிக்கும் அளவுக்கு நின்றருள் புரிகிறாய். அதற்குமேல் நெஞ்சில் நின்றருள் புரிவதில்லையே; ஏன்? இல்லை, இறைவா! பொய் சொல்லி விட்டேன்; மன்னித்து விடு, நீ என் நெஞ்சில் நீங்காமல் நிற்கிறாய், நான் தான் அஃது அறியாமல் கெட்டேன், மன்னித்துவிடு. என்மீது குற்றமில்லை; உலகம் என்னை அவ்வளவு பலமாக இழுக்கிறது. வினையே வாழ்க்கையாக மாறுகிறது. விதைக்கும் வினைகளை அறுவடை செய்ய வேண்டாமா?

இறைவா! என் செய்ய? என் மனம் ஓயாது வினையாற்றுகிறது; இந்த வினை இயக்கம் ஓய்ந்தால் அல்லவா நின் பக்கம் வரலாம். இறைவா! என்ன அருளிச் செய்தனை, வினைகளைத் தொடர்ந்து செய்யச் சொல்கின்றாய்? வினைகளை இயற்றுவதுதான் உய்திக்கு வழியா? இறைவா! எனக்கும். புரிகிறது. "வினைகளைச் செய்! பிறர்க்கெனச் செய், வினைகளைப் பிறர்க்கெனச் செய்யின் அது நோன்பு" என்கிறாய். இறைவா! இனி எனக்கென்று முயற்சி செய்யேன்! பிறர்க்கென முயன்று வினைகளைச் செய்வேன். என்னை மறவாது நினைந்து வாழ்த்தியருளுக!