பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

77




மார்ச் 1


என் பொறிகளை நன்னெறியில் நிற்கும்படி செய்தருள்க!


இறைவா! நீ உன்னை எனக்குக் காட்டியருளும் துறைகள் எத்தனை! எத்தனை!! ஆனால், அங்க அற்புதத்தை உற்றறியும் ஆற்றல் பெற்றேனில்லை. எனக்கு வாய்த்துள்ள பொறிகளின் கொட்டம் தாங்க முடியவில்லை. அவை நெய்க்குடத்தில் எறும்பென என்னை மொய்த்துக்கொண்டு சீரழிப்பதின் மூலம் உன்னை ஆழ்ந்தனுபவிக்க முடியாமல் தடை செய்கின்றன. நானும் அவைகளோடு போராடிப் பார்த்தேன், பயனில்லை. நீ கொஞ்சம் கருணைகாட்டி, பொறிகளை நன்னெறியில் நிற்கும்படி செய்தருள்க.

இறைவா! என் பொறிகள் புறத்தே போகாமல்-அறிவு வாயில்களாக அமைந்து, என் ஆன்மாவை வளர்க்கும்படி அருள்செய்க! என் கண் நின் காட்சியில் களித்தால், எவ்வளவு இன்பம்! நின் படைப்பாகிய இயற்கையைக் கண்டுகளித்தால் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கும். என் இதயம் பொங்கும். என் கண் யாண்டும் யார் மாட்டும்-குளிர்ந்த, கனிந்த பார்வையைச் செலுத்தினால்-நான் செழிப்பேன். என் உலகம் செழிக்கும். அழுக்காறு என்ற பாவியே இல்லாத உலகம் தோன்றும். இறைவா! என் கண் அற்புதமான ஆற்றலுடையது. ஆயிரம் ஆயிரம் கற்பனைகள் காட்டும் திறத்தினது, என் கண் பேசினால் போதுமே, இறைவா! என் கண் எனக்குத் துணையாய் அமைந்து பணி செய்ய அருள் செய்தருள்க! ஞாலம் முழுதும் கொண்டு வந்து காணிக்கையாக்குகின்றேன். இறைவா, அருள் செய்க!