பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





மார்ச் 2


வாழ்வு முழுமையும் ஆற்றலாக்கி அருள்க!


இறைவா! நீ ஆற்றலாக இருந்து இயக்குகிறாய். உன்னை அருச்சிக்கும் நான், உன் ஆற்றலைப் பெற்றேனில்லை. நின் திருவுள்ளப்படி ஆற்றல் மிக்குடையோனாக வாழ நினைத்தேனில்லை. உன்னிடம் ஆற்றலை இரந்து பெற்றேனில்லை. உன்னிடம் நான் சோறு, துணி என்று யாசிக்கிறேன். இறைவா, என்னுடைய அறியாமையை மன்னித்துவிடு. எனக்கு ஆற்றலை அருள் செய்க! வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் செய்க! இந்த வையகம் பயனுற வாழும்படி அருள் செய்க!

இறைவா, இந்த உலகமே ஓர் ஆற்றல், உலக இயக்கம் ஆற்றல் வழிப்பட்டது. இறைவா! ஆற்றலே உலக இயக்கம். "ஆற்றலுடன் வாழ்வதே வாழ்வு” என்ற உன் போதனை என் மனத்தில் தைத்துள்ளது.

இனி நான் ஆற்றலை வளர்க்கும் வழிபாடாகிய உழைப்பில் ஈடுபடுவேன். யாராயினும்-எவராயினும் ஆற்றலுடையோராக இருப்பின் அவர்தம் துணையை நாடிப் பெறுவேன். இறைவா என்னை வாழ்த்தியருள்க! உன்னுடைய அளப்பரிய ஆற்றலை நினைந்து நினைந்து வழிபாடியற்றி அவ்வாற்றலை எல்லாம் என் வாழ்க்கையில் என்னுடைய பொறிபுலன்கள் வாயிலாக வெளிப்படுத்தி வாழ்ந்திட அருள்செய்க! நான் வெற்றுப்பாவைக் கடந்து ஆடி ஓய்ந்திடாமல் அளப்பரிய ஆற்றலைப் பெற்று அனைவரும் இன்பமுறச் செய்து வாழ்ந்திட அருள்செய்க! நன்றின் தொடர்பிலாத் தீமையை வெறுத்து ஒதுக்கிடும் திண்மையை அருள்செய்க! என் வாழ்வு முழுவதும் ஆற்றலேயாகிடுக. இறைவா அருள் செய்க!