பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

79





மார்ச் 3


திருத்தொண்டின் நெறி நிற்க அருள்க!

இறைவா! என்னை என் மனம் பிடித்தாட்டுகிறது. என் மனம் நான் சொன்னபடி கேட்க மறுக்கிறது. நான் என்ன செய்ய? உன்னுடைய திருவருள் எனக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. கல்லைப் பிசைந்து கனியாக்கக்கூடிய வல்லாளன் நீ, நீ, ஏன் என் மனத்தைத் திருத்தி எனக்கு ஒத்துழைக்கும்படி செய்யக்கூடாது? இறைவா, அருள் செய்க!

பெரும் புலர் காலை மூழ்கி, உனக்கு ஆர்வத்தை என் நெஞ்சிலே வைத்து, நின் திருக்கோயில் வலம் வருவதற்கு அருள் செய்க! நின் திருக்கோயில் திருவலகுப்பணி செய்திட அருள் செய்க! இறைவா உன்னை நாள்தோறும் விரும்பி அரும்பொடு மலர்கொண்டு-விதியினால் தூபம், தீபம் இட்டு வழிபாடு செய்யும் புண்ணியத்தின் புண்ணியத்தினை அருள் செய்க! நீ என் வழிபாட்டில் எழுந்தருளி-வழிபாட்டினை ஏற்று அருள்பாலித்திட வேண்டும். பழுத்த மனத்தினாக நான் வாழ்ந்திட அருள் செய்க. திருத்தொண்டின் நெறி நின்றிட அருள் செய்க!