பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

83






மார்ச் 7


என் இதயம் என் வசமாகிட அருள் செய்க!

இறைவா, ஏன் சிரிக்கிறாய்? இறைவா! உன்னை இவ்வளவு கெட்டிக்காரத்தனமாக மந்திரங்கள், சடங்குகளினால் ஏமாற்றுகிறோமே என்றா? இல்லை, இறைவா! ஏமாற்றும் நோக்கமில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை அவ்வளவு தான். உனக்கு மலர்களால் ஆய அருச்சனையா வேண்டும்? வேண்டவே வேண்டாம். இதய மலர்களால் உன்னை அருச்சித்தால் போதும். ஆனால், என் இதயம் என்னிடத்தில் இல்லையே. அதை நான் சைத்தானிடத்தில் ஒத்தி வைத்துவிட்டேன். அதனால்தான் மலர்களால் அருச்சிக்கிறேன். இறைவா! என் இதயத்தை மீட்டுக்கொடு.

என் இதயம் ஆணவத்திற்கு அடிமையாகித் துரும்பாய்க் கிடக்கிறது; செயலிழந்து கிடக்கிறது. என் இதயம் என் வசம் இல்லை. நூறாயிரம் தடவை எடுத்துச் சொன்னாலும் அது கேட்பதில்லை, இறைவா!

நீ என்பால் முழுக்கருணை செலுத்தினால்தான் நான் பிழைப்பேன். இறைவா! என் இதயமும் எனக்குத் தேவை, நான் அதை இழந்து விடக்கூடாது. இறைவா நின் கருணையால்-பையத் தாழுருவிட ஆட்கொண்டருள் செய்க! இதயம் உடல் முழுவதும் பாய்ச்சும் குருதியோடு, அன்பையும் சேர்த்துப் பாய்ச்சும்படி செய்! நான் உய்தி பெற்று விடுவேன். இறைவா, அருள் செய்க!