பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





மார்ச் 8


இறைவா, என்னைத் திருத்தி ஆட்கொள்க!


இறைவா! நான் ஒரு புரியாத புதிர். ஆம், வெளியில் குப்பை கூளங்களைக் கண்டால் முகம் சுளிக்கிறேன். துர்நாற்றத்தைக் கண்டால் மூக்கைப் பிடிக்கிறேன். ஆனால், என் மனத்தில் உள்ள குப்பை கூளங்கள், அம்மம்ம! அந்தக் குப்பை கூளங்களைக்கண்டு ஒரு நாள் கூட முகம் சுளித்தே னில்லை. நாணினேன் இல்லை. என் புலன்களில் வீசும் சுயநலவாடை அம்மம்ம. கொடியது. இதற்கும் நாணினேனில்லை.

இறைவா, என்னைத் திருத்தி ஆட்கொள்! எப்படியிருந்தாலும் நான் உன் உடமைதானே! குப்பை கூளங்களும் கூட சூழ்நிலையால்தானே நாறுகின்றன! அவற்றை மண்ணிற்குள் முறையாக இட்டு மூடினால், படைக்கும் ஆற்றல்மிக்க உரமாகிவிடும். அங்ஙனமே யான்! என்னை நீ திருத்தி ஆட்கொள்ளலாம்; கொள்ள முடியும். உனது அருள் நோக்கு என் பால் விழீன் நான் படைப்பாளியாகி விடுவேன், வாழ்வேன். இறைவா, எடுத்தருள்க!