பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

85






மார்ச் 9


இறைவா, நீ என் தனித் துணையாகி அருள்க!


இறைவா! என் மனம் தெளிவாக இல்லை. குழம்புகிறது. ஏன், வேடிக்கை பார்க்கிறாய்? இன்றே, இப்போதே அருள்செய்! நீ என் புலன்களுக்கும், பொறிகளுக்கும் விருந்தாக வந்தருள் செய்தால்தான் நான் தேறுவேன்? இல்லையானால் என் நிலைபடுமோசம் ஆகிவிடும்.

வாழ்க்கையோ வழுக்கல். வழுக்கலில் ஊன்றி நிற்கக்கோலினைக் காணேன். வழுக்கல் திசையில் இழுத்துச் செல்லவே துணைகள் அதிகம் வந்தமைகின்றன. பொறிகளின் கொட்டத்திற்குத் தூபம் போடும் அமைப்பு ஏராளம். இந்நிலையிலும் நின்னை நினைக்க, பூசனை செய்ய ஆர்வம் இருக்கிறது. ஆனால், இந்நெறியில் நிறுத்தத் துணை இல்லையே. நான் என் செய்வேன்? நின் துலாக்கோலும் ஏன் தடுமாறுகிறது? மாணிக்கவாசகருக்கும், சுந்தரருக்கும் ஒரு நியாயம்; எனக்கு ஒரு நியாயமா? நீயே வந்து என்னை வலிய ஆட்கொள்ளக்கூடாதா? ஆட்கொள்! எழுபிறப்பும் உனக்காட் செய்வேன். நீ என் தனித் துணையாக வந்தமைவுறின் என் வாழ்நாள் எல்லாம் பயனுடைய நாளே!