பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

131


அவனும் அவளும் தனித்து வாழ்கின்றனர். உடல்களால் மட்டும் தனித்து அல்ல. உயிர்களால் தனித்து அல்ல. காதலின்பத்தை அருளின்பமாக மாற்றிப் பரபரப்பான உலகத்திலிருந்து விலகித் தனித்து வாழ்கின்றனர். இப்போது விழைவு இல்லை; விருப்பமில்லை. தாம் கடந்து வந்த காலத்தின் வாழ்க்கைப் பயணங்களைத் திறனாய்வு செய்கின்றனர். புலன்களைத் துய்மையாக்குகின்றனர்; அவ்வழிப் பொறிகளில் தூய்மை காக்கின்றனர்; தவம் செய்கின்றனர். இறைநெறி நிற்கின்றனர். தமிழின் நாகரிகத்தில் இங்கேயே துறவு மலர்கிறது.

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே[1]

என்பது தமிழர் வாழ்வியல் நெறி.

வீடு

திருவள்ளுவர் கடவுளை வாழ்த்தி வாழும்படி வழி நடத்துகின்றார். திருவள்ளுவர் முதிர்ந்த ஞானி; சீவன் முத்தர்; திருவடி ஞானம் பெற்றவர். அதனால், திருவடிகளையே தொழத் தூண்டுகிறார். வழிபாட்டால் பொறிகள் தூய்மை பெற்று, மற்றவர் சுவைத்தற்குரிய சுவையினைப் பெற்று விளங்க வேண்டுமென்பது வள்ளுவர் நெறி.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.[2]

பொறிகளை “அவித்தல்” திருவள்ளுவர் கண்டுணர்த்திய செந்நெறி. திருவள்ளுவர் பொறிகளை அடக்கவோ அழிக்கவோ சொல்லாமல் அவித்தல் என்று கூறுவது நினைந்து நினைந்து இன்புறத்தக்கது. சுவைத்தற்குரியனவாகவும் ஆனால் இயல்பில் சுவையில்லாதனவாகவும் இருப்பனவற்றைச்

  1. தொல்காப்பியம், கற்பியல், 51.
  2. திருக்குறள், 8.