பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே

(ஐங்குறுநூறு, கடவுள் வாழ்த்து)

என்ற ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்தில் அம்மையப்பன் வழிபாடு எடுத்துக் கூறப்படுகிறது. சிவனைச் செம்மை நிறத்தின் அடிப்படையிலும், அம்மையை நீலநிறத்தின் அடிப்படையிலும் விளக்குதல் ஆன்றோர் மரபு, “வில்லியம் ஜேம்ஸ்” என்ற ஓவியன் வெம்மையின் ஆற்றலை விளக்கச் சிவப்பு நிறத்தையும், தண்ணளியை - தண்ணருளை விளக்க நீல நிறத்தையும் பயன்படுத்தும்படி அறிவுரை கூறியுள்ளது நினைவு கூரத்தக்கது.

“சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” என்ற திருப்பெயர் எண்ணுதற்குரியது. இந்த அம்மையப்பன் வழிபாடு தொன்மைக்காலத்திலேயே தோன்றிச் சிறந்தது என்பதை மாணிக்கவாசகர் தாம் அருளிய திருவாசகத்தில் விளக்கியுள்ளார்.

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும்உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிந்துரதாய் கோத்தும்பீ

(திருவாசகம், திருக்கோத்தும்பி, 18)

என்பது திருவாசகம்.

இலிங்க வடிவ நிலையில் இறைவனின் ஆற்றலைக் குறிக்கும் அடித்தளத்திற்கு ஆவுடையாள், என்றும், மேல் நிற்கும் இலிங்கத்திற்கு ஆவுடையப்பன் என்றும் பெயர்கள் வழங்கப் பெற்றுள்ளன. இத்தத்துவம் “ஓம்” என்ற ஒலி வடிவிலும் பிள்ளையார் சுழியின் வரிவடிவத்திலும் அமைந்திருக்கிறது.