பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

“மானுட வாழ்க்கை சிறப்புறப் பல நலங்கள் தேவை. அவற்றுள் சிறப்பானவை உடல் நலனும் ஆன்ம நலனுமாம். காற்று, தண்ணீர், உணவு, உழைப்பு. குடியிருப்பு மருந்து ஆகியவற்றால் உடல் நலம் சிறக்கும். கல்வி, கேள்வி, அறிவு, மணவாழ்க்கை, பிரார்த்தனை ஆகியவற்றால் - ஆன்ம நலம் சிறக்கும்.”

“தாய்மொழி, நாட்டுமொழி, உலகப்பொதுமொழி ஆகிய மும்மொழிகளையும் கற்றல் நலம்.”

“அழுக்காறு தோன்றுதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, சமுதாய அமைப்பு முறையில் உடையார், இல்லாதார் என்ற முறையில் வாழ்வியல் அமைந்திருப்பது. இரண்டு, உரிய வாய்ப்புக்கள் அனைவர்க்கும் உரிமையாக்கப்படாமல் சிலருக்கே உரிமையாக்கப்பட்டிருப்பது.”

“உண்டலில் வாய்க்கினிதென்று உண்ணாது உடற்கினிதாயவற்றையே உண்டல் வேண்டும்.”

“தமிழைக் கற்போர்; திருக்குறள், திருமுறைகள், சங்க இலக்கியங்கள் ஆகிய இவற்றை முழுமையாகவும் முறைமையாகவும் படித்தல் நன்று.”

“வேலை வாய்ப்புக்கள், இடஒதுக்கீடுகள், சாதிகளை மட்டும் அடிப்படையில் வைத்துக் கொண்டு அமைவது தக்கதன்று. குடும்ப வருவாய் அடிப்படையில் அமைதல் வேண்டும். அவையும் ஒரு கால எல்லைக்குட்பட்டிருத்தல் வேண்டும்.”

“திருக்குறள் குடியாட்சி முறை தழுவிய முடியாட்சியையே கூறுகிறது. இதனை,

“குடிதழிஇக் கோலோச்சம் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு ”
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்”

என வரும் திருக்குறள்களால் அறியலாம்.”

“மக்கள் வாழ்வுக்கும் அரசுக்கும் பொருளே அடிப்படை. திருக்குறள் காட்டும் பொருளியல் நுட்பமானது. திருக்குறள் தனியுடைமைச் சமுதாயத்தை மறுப்பதன்று. ஆயினும் தனி உடைமைக்குச் சில அறநெறிகளை - விதிகளை விதிக்கிறது.