பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வந்திலரேல் நீறெங்கே? மாமறைநூல் தானெங்கே?
எந்தைபிரான் அஞ்செழுத் தெங்கே!”

என்ற பழம்பாடல், வினாவால் விளக்குவது காண்க.

தமிழக அரசர்களில் பலர் சிவநெறியைச் சார்ந்தே ஒழுகி வந்துள்ளனர். ஒரு சிலர் திருமாலியத்தைச் சார்ந்திருந்தனர். ஆயினும், பெரும்பாலான அரசர்கள் தாம் எந்தச் சமயத்தை மேற்கொண்டொழுகினும் மற்றச் சமயங்களை மதித்து வந்துள்ளனர்.

பல்லவர்களில் ஓரிரு அரசர்கள் மட்டும் சமண சமயத்தைச் சார்ந்திருந்தனர். பல்லவர்களில் மகேந்திர பல்லவனும் பாண்டியர்களில் நெடுமாறனும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களும் கூட முறையே அப்பரடிகளாலும், திருஞானசம்பந்தராலும் முறையாகச் சைவத்துக்குத் திரும்பி அழைக்கப் பெற்றவர்கள். பழங்காலத் தமிழகப் பேரரசுகள் உள்நாட்டு அமைதிக்கு மக்களின் சமய நம்பிக்கைகளையே களமாகக் கொண்டு செயற்பட்டன.

பல்லவ அரசர்களால் சிவநெறி மிகச் சிறப்பாக வளர்ந்தது. ஆனாலும், தூய சிவநெறியாக வளராமல் செழுந்தமிழ் வழக்கில் ஊடுருவிக் கலக்க ஆவலுடன் துடித்த ஆரிய வேதத்திற்கு வாயிலமைத்துக் கொடுத்ததே பல்லவப் பேரரசுதான். களப்பிரர் ஆதிக்கம் (கி.பி.300-600) தமிழகத்தில் கால் கொண்டது. அவர்கள் மூலம் சமண, பெளத்த சமயங்கள் பரவின. ஆரிய வேதங்களும் பொய்ம்மை நிறைந்த புராணக் கதைகளும் தமிழ்நாட்டில் பரவின. ஆயினும் இந்த இடைக் காலத்தில்தான் கோச்செங்கணான், புகழ்ச்சோழர், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய அரசர்கள் திருக்கோயில்களை எடுப்பித்தும் பூசனைகள் செய்வித்தும் சிவநெறியை வளர்த்தனர்.

கி.பி. 600 முதல் 900 வரை ஆண்ட பல்லவர்கள் காலத்தில் பெரும்பாலும் சிவநெறியே வளர்ச்சி பெற்றது.