பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

165


இத்திருமடம், முத்தி நிச்சயம் முதலான சாத்திர விளக்க நூல்களைச் செய்து பெருமை பெற்றது. இன்றும் சிறந்த சாத்திர, தோத்திர நூல்களை வெளியிட்டும், சைவ சாத்திரங்களைப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களைக் கண்டும் சிறந்த முறையில் தொண்டு செய்து வருவது தருமபுரம் ஆதீனம் ஆகும்.

தருமபுர ஆதீனத்தில் இன்று 26ஆவது மகாசந்நிதானமாக எழுந்தருளியுள்ள திருவருள் திரு. சண்முகதேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகள் அவர்கள், சாத்திரங்களிலும் திருமுறைகளிலும் நிறைந்த ஞானமும் அந்நெறி முறைகளின் வழி அயர்விலாது அரன் தன்னை அருச்சிக்கும் ஆர்வமும், சிவஞானத்தின் இயல்பெனச் சிவஞான போதம் 12ஆவது சூத்திரம் சொல்லும் சிவப் பணிகள் அனைத்திலும் தோய்வும் ஈடுபாடும் கொண்டு சைவம் செழிக்க அருளாட்சி செய்து வருகிறார்கள்.

அடுத்து, சிறந்ததொரு திருமடமாக விளங்குவது திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம். இது தருமையின் ஞானப் பரம்பரை வழி வந்த, கொழிதமிழ்க் குமரகுருபர அடிகளால் தோற்றுவிக்கப் பெற்றது. இத்திருமடம், காசி முதல் இராமேச்சுரம் வரை இயற்றியுள்ள அறக்கட்டளைகள் பலப்பல. வடபுலத்து மக்கள் செந்தமிழையும் சிவநெறியையும் அறிந்து கொள்ளச்செய்த பெருமை இத்திருமடத்திற்கு உண்டு.

இன்று இத்திருமடத்தின் தலைவராக எழுந்தருளியுள்ள அருள் திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் செந்தமிழ் நூற்புலவராக, சிவஞானச் செல்வராக விளங்கிப் பணி செய்துவருவது பாராட்டுதலுக்குரியது. மேலும்,

1. காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம்
2. மயிலம் பொம்மபுர ஆதீனம்
3. பேரூர் அருள்திரு. சாந்தலிங்கர் திருமடம்.