பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

179


மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யான்.....
(திருக்கோவை. 312)

என்றும் அருளிச் செய்தமை அறிக, மூன்றாவது, பொருள்களின் தன்மையைக் கடத்தல், அதாவது பொருள்களின் இயல்புகளில் அடங்காமல் அவற்றின் இயல்புகளையும் கடந்து நிற்றல். அதாவது வண்ணம், வடிவு அளவு, சுவை ஆகிய எல்லையினையும் கடந்து நிற்றல் என்பதாகும். இங்ஙனம் கடந்து நின்றாலும் அவ்வப்பொருளில் தன் நிலை கெடாமல் நின்றருளி இயக்குகின்றமையால் புறத்தேயும் உளன்; அகத்தேயும் உளன் என்ற வழக்குத் தோன்றியுள்ளது. இறைவன் பொருள்களைக் கடந்தே நின்றால் உலகுக்கும் உயிர்களுக்கும் பயனே இல்லாமற் போகும். பொருள்களின் எல்லைக்குள்ளும், தன்மைக்குள்ளும் உள்ளடங்கியே இருக்குமானாலும் புதுமையாகாது; சிறுமை தோன்றும், ஆக்கத்திற்கும் பயன்படாது. ஆதலால் எல்லாமாய் அல்லதுமாய் இறைவன் விளங்குகின்றான் என்று சித்தாந்தம் கூறுகின்றது. அதனாலன்றோ சித்தாந்தச் செந்நெறி இறைவனை எட்டுருவினன் என்று உணர்த்துகிறது. நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதன் இவற்றொடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றான். இதனை மாணிக்கவாசகர்,

நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகேழ் எனத்திசை பத்துஎனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

(திருவாசகம் திருத்தோணோக்கம். 5)

என்பார். சித்தாந்தச் செந்நெறி உணர்த்தும் கடவுள், சிவம். சிவம் என்பது வள்ளுவம் கூறிய கடவுள் வாழ்த்தில் உள்ளபடி,