பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”

என்று அப்பர் பெருமான் பாடுகின்றார்! இந்தப் பாடலுக்குப் புதிய விளக்கம் குற்றமற்ற வீணையின் இனிய கீதத்தை எல்லோரும் கேட்டு மகிழலாம்! தேவையான நிபந்தனை நம் காதுகளுக்குக் கேட்கின்ற சக்தி வேண்டும், மாலைக் காலத்து அழகிய நிலவை எல்லோரும் பார்த்து மகிழலாம். அதற்குத் தேவையான நிபந்தனை நம் பார்வையில் குறைபாடு இல்லாது இருக்க வேண்டும். வீசுகின்ற தென்றல் காற்று எல்லோருக்கும் பொதுவானது, ஆண்டவனுக்கும் பொதுவானது; அடிமைக்கும் பொதுவானது, அதைப் போலவே பரம்பொருள் எல்லோருக்கும் பொதுவானது, வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பாக, எல்லோருக்கும் பொதுமைப் பொருளாக இறையின்பத்தை அடையாளம் காட்டினார்.

அருள்நெறித் தந்தையின் சமயம் பற்றிய புதிய சிந்தனை எந்நாளும் எண்ணி இன்புறத்தக்கது. உடல் வாழ்வு தன்னலம் பற்றியது; உயிர் வாழ்வு பொது நலம் பற்றியது. சராசரி மனித வாழ்க்கையை உயிர்ப்புள்ளதாக்கி முழுமையாக்கும் உணர்வின் தேவையிலே தோன்றியது சமயம், இதனை மகாசந்நிதானம் “பொதுவில் ஆடுபவன் நிழலின் பொதுமையைக் காணாமல், தீமையை அகற்றாமல் நன்மையைச் சாதிக்காமல், துன்பத்தைத் துடைக்காமல், இன்பத்தைப் படைக்காமல் கிழடுதட்டிச் செயலிழந்துபோன நமது சமய அமைப்புகள் குறையுடைய நடைமுறைகளே!” என்று சமய உலகை மாபெரும் புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்று அறைகூவுகின்றார்கள். சமயம் மனிதத்தை மேம்படுத்த! சமயம் மனித வாழ்வுக்கே! சமயம் மனிதத்தைப் புனிதமாக்க என்ற உயர்நிலையில் சமய உலகப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் அருள்நெறித் தந்தையின் பாதையில் பயணம் செய்ய, ‘‘சமய இலக்கியம்’’ வாழும் மானிடத்திற்கு அற்புத வழிகாட்டியாகும்.

இவ் அரிய நூல் ஆக்கத்தைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தொகுப்பு நூலாக வெளியிடும் மணிவாசகர் பதிப்பக ச. மெய்யப்பன் அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்! இந்நூல் தொகுப்புக்குப் பெரிதும் பாடுபட்ட நம் ஆதீனக் கவிஞர் மரு. பரமகுரு, பலவகைகளில் இந்நூல் தொகுக்கும் களத்தில் கடமையாற்றிய இராமசாமி தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் தெ. முருகசாமி ஆகியோருக்குப் பெரும் நன்றியறிதலுடன் கூடிய பாராட்டுக்கள்! இந்நூலுக்கு அரியதொரு அணிந்துரை வழங்கியுள்ள முனைவர் கு. சுந்தரமூர்த்தி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நமது சமய உலகப் பாதையில் பயணம் செய்ய “சமய இலக்கியம்” வழிகாட்டும் என்று நம்புகின்றோம். ‘சமய இலக்கியம்’ இயக்கமாக மாறினால் அதுவே சமய உலகத்தின் மாபெரும் புனருத் தாரணம் ஆகும். ‘சமய இலக்கியம்’ புதிய மறுமலர்ச்சிக்கு வழிகாட்டும் என்று இறையருளைப் போற்றிப் பிரார்த்திப்போம்!