சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்
197
ஆதலால்தான், ஞானாசிரியன் மாணாக்கனுக்குச் சிவத்தினைக் கண்டு காட்டி வழிப்படுத்துகிறான். வழிபாட்டில் அகப்பூசை, புறப்பூசை என இரண்டு பூசை. அகப்பூசையே உயர்ந்தது. அப்பூசையின் அனுபவத்தை இடையீடின்றி அனுபவிக்கவும் பாதுகாத்துக் கொள்ளவும் துணை செய்வது புறப்பூசை. நாள்தோறும் இறைவனின் அருட்சின்னமாகிய சிவலிங்கத்தை வழிபடுதல் கடமை. சீவன் முத்தர்களாகிய சிவனடியார்களைத் தொழுதல்; அவர்களோடு இணைந்திருத்தல் முதலியன, பெற்ற சிவ ஞானத்தைப் பேணவும், பெருக வளர்த்துத் துய்க்கவும் துணை செய்யும். இதனைச் சிவஞான போதம்,
- செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா
- அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ
- மாலற நேயமும் மலிந்தவர் வேடமும்
- ஆலயந் தானும் அரனெனப் படுமே
என்றருளிச் செய்துள்ளமை அறிக. இதே கருத்தை,
- நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
- அல்லாது வேறு நிலையுள தோ
என்று பட்டினத்தார் விளக்குவதையும் அறிக. தருமைக் குரு ஞானசம்பந்தர்,
- ஆசையறாய், பாசம்விடாய்; ஆனசிவபூசை பண்ணாய்
- நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய்-சீச்சி
- சினமே தவிராய்; திருமுறைகள் ஓதாய்
- மனமே உனக்கென்ன வாய்,
என்று அருளிச் செய்ததையும் அறிக.
இத்தகைய சிறந்த சித்தாந்தச் செந்நெறி நம்பிக்கைக் குரியது; நல்லெண்ணத்திற்குரியது; இம்மைக்கும் பயன் தருவது. மறுமைக்கும் பயன் தருவதாம்!