சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்
209
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
இது சிறந்த சமய வாழ்க்கையின் பயன் கூறும் பாட்டு. எந்த நாட்டில் மனிதகுலத்தினிடையில் அன்பும் ஆர்வமும் நட்பும் வளர்ந்து ஒப்புறவு நெறி கால் கொள்கிறதோ ஆங்குப் பணியும், தொண்டும் சிறப்புற்று விளங்கும். ஆங்கு மனித குலத்தை வருத்தும் பகையில்லை. பிணியில்லை; களவும் காவலும் இல்லை. ஓர் அருமையான கூட்டுச் சமுதாயம் நிலவும். ஆதலால் “திருநாவுக்கரசு வளர்திருத் தொண்டின் நெறி நிற்றல்” சமயநெறியாளர் கடமை.
உயிர் துய்க்கும் இயல்பினது. துய்த்தலில் பொருள்களைத் துய்த்தல், காதலைத் துய்த்தல் மட்டும் அடங்காது. பிறர் மகிழ்தலைக் கண்டு, தான் இன்புறுதலும், துய்த்தலுமேயாம். இதுவே சிறந்த துய்த்தல்.
உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்
என்ற குறள் அறிக உயிர்க்கு உய்யும் நெறி துய்த்தல் நெறியேயாம்.
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
என்ற அப்பரடிகளின் அருள்மொழி அறிக.
பொன்னும் மெய்ப்பொளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னைஎன் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன்என் றறியொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத் தணி
ஆரூரானை மறக்கலுமாமே
என்ற ஆரூரர் அருட்பாடலாலும் அறிக.