பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

217


முகத்துடன் “மனிதர்காள் இங்கே வம்மின்” என்றழைக்க இயலும்?

மனித குலத்தை ஒரு குலமாகக் கருதாதபோது யாத்திரை ஏன்? பாதகாணிக்கைகளை வாங்கிக் குவிக்கவா? பிழைப்பின் பெயரால் பெட்டகங்களை நிரப்பிக் கொள்ளவா? ஊரார் செல்வத்தை அடித்து ஒரு குலத்தின் வயிற்றில் போடவா?

“உலகத்து வாழ்க்கை துன்பமானது; துன்பமானதாகத் தான் இருக்கும்” என்று கருதும் புன்மைநெறி சிவநெறிக்கு இருந்ததில்லை; துன்பம் துடைத்து வாழ்க்கையை இன்ப மயமாக்குதல் சிவநெறியின் கோட்பாடு

சிவநெறியின் கோட்பாடு பழந்தமிழர் காலந்தொட்டு வழிவழியாக வளர்ந்து வருகிறது. சங்க காலக் கவிஞர் “பக்குடுக்கை நன்கணியார்” ஓரில்லத்தில் காதல் களியாட்ட மகிழ்ச்சி, பிறிதோர் இல்லத்தில் இறப்பு வழிப்பட்ட துன்பம்! ஏன் இந்த வேறுபாடு? என்று கொதித்துக் கேட்கிறார். இப்பாடலில் பேசப்பெறும் இன்ப துன்பங்கள், சாதி வேற்றுமை, கற்றார், கல்லாதார், வளமுடையார், வறுமையுடையார் என்ற செயற்கை வேறுபாடுகளல்ல. ஊழி ஊழியாக இயற்கையில் நிகழ்ந்து வரும் வேறுபாடு. மரணத்தை வென்றார் யார்?

மரணத்தை வெல்ல முடியும் என்ற கருத்து இருக்கிறது. கதைகள் இருக்கின்றன. ஆனால் இன்னும் வெற்றி பெற முடியவில்லை. வளர்ந்து வரும் வாழ்நாளின் அளவைப் பார்த்தால் எதிர்காலத்தில் வெற்றி பெற்றாலும் பெறலாம்? ஆயினும் இன்று வரையில் சாதலும் பிறத்தலும் புதியனவல்ல என்று கூறியாங்குச் சுழற்சி முறையில் நடைபெறும் இயற்கை வழியினாலான துன்பத்தைக்கூட-மரணத்தைக்கூடக் கடிந்துள்ளார். இதே உணர்வைச் சுந்தரர் வரலாற்றில் அவிநாசியில் காண்கின்றோம்.