பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

263


புனலும் பூவும் சொரிந்து வழிபடும் உரிமை

வழிபாடு என்பது உயிர்கள் தம் உய்தி நோக்கிச் செய்தல். வழிபாட்டில் அகக்கருவிகளும் புறக்கருவிகளும் ஈடுபட வேண்டும். வழிபாட்டில் நாம் ஒவ்வொருவரும் சிறக்கவேண்டுமானால் நாள்தோறும் தனித்திருந்து திருமுறைகள் காட்டிய நெறிமுறையில் அகப்பூசையும் புறப் பூசையும் செய்யவேண்டும். இங்ஙனம் செய்வோர் எண்ணிக்கை வரவரக் குறைந்துகொண்டே வருகிறது. தமிழகத்திலுள்ள ஆற்றங்கரைகளிலும் திருமடங்களிலும் இங்ஙனம் பூசை செய்வதற்கென்று அமைக்கப்பெற்ற மேடைகள் இன்று பயனற்றுக் கிடக்கின்றன. இங்ஙனம் ஒவ்வொருவரும் நாள்தோறும் முறையான சிவபூசை செய்ய இயலாது என்று கருதித்தான் போலும் திருக்கோயில் வழிபாட்டு முறையைக் கண்டனர். நாள்தோறும் எல்லாரும் முறையாக அகப்பூசை செய்தல் என்பது எளிதன்று. அத்துறையில் வல்லார் இன்று இருக்கிறார்களா என்பது ஐயத்திற்குரியது. அந்த அருமையான விஞ்ஞானக் கலையைக் கற்றுத் தருகின்ற சித்தர்கள் இன்று அருகிப்போயினர். ஆதலால் அகப்பூசை செய்வதிலுள்ள இடர்ப்பாட்டையும், காலத்தின் அருமையையும் கருதி, அகப்பூசை நெறியினின்று பெருமானைத் திருவுருவத்தில் எழுந்தருளச் செய்து நாம் எளிதாக வழிபடுவதற்கு ஏற்ற வகையில் தோன்றியதே திருக்கோயில் வழிபாடு என்று நாம் நம்புகின்றோம். அயல் வழிக் கருத்தைக் கேட்டு அலமருதல் நியாயமன்று. அவர்கள் அருச்சகர்களாக இல்லாமல் சிவாச்சாரியர்களாக இருந்து, கண்டு காட்டி வழிநடத்த வேண்டும் என்பதே நமது விருப்பம். இது நமது சமயத்தை வளர்ப்பதற்கும் சமுதாயத்தை ஒருங்கிணைப்பதற்கும் உரிய சாதனம்.

வழிபாட்டு மொழி

அடுத்து, வழிபாட்டுக்குரிய மொழி குறித்தது! இறைவன் மொழி, இனம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்த