பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடியா? கொம்பா?

277


அத்தகையோரைத்தான் “இவறிக்கூட்டுவான்” என்று பரிமேலழகர் குறிப்பிடுகின்றார்.

சமயக்கணக்கர்கள், தத்துவத்துக்கு - வாழ்வுக்கு உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்காது, உடலுக்கு-எலும்புக் கூட்டுக்கு முக்கியத்துவம் தருவார்கள்; தத்துவத்துக்கு முதலிடம் தராது சடங்குகளுக்கே முதலிடம் தருவார்கள். ஒத்த நோக்கில்லாத அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியாது; அனுபவம் கிடையாது; எனவே சமயக் கணக்கர் வேறு சமய நெறியாளர் வேறு. வள்ளுவர் சமய நெறியாளர் மதிவழிச் செல்பவரே தவிர சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாதவர் என்று கூறியது உண்மைதான்.

வேறு வேறா?

சமுதாயம் வேறு, தனி மனிதன் வேறு என்று கூறப் பெற்றது. இப்படியும் சிலர் கூறுகிறார்கள். தனிமனிதனும் சமுதாயமும் ஒன்றே என்ற கருத்தும் பலரிடத்தில் நிலவி வருகிறது. இத்துறையில் மக்கள் மன்றம் திட்டவட்டமான முடிவுக்கு இன்னும் வரவில்லை. நம்மைப் பொறுத்த வரையில் இரண்டும் ஒன்று என்றே கருதுகிறோம்.

வயிற்றுக்குள் உணவு போட்டாலும் அது செங்குருதியாக மாறி கை-கால்-தலை முதலியவற்றுக்கெல்லாம் ஓடிப் பாய்ந்து பயன் தருவதைக் காண்கிறோம். தனி மனிதன் தன் வாழ்வில் நல்லவனாக - ஒழுங்குடையவனாக - பண்பாடு உடையவனாக வாழ்ந்தால் அப்பண்பியல்புகள் அவனைச் சூழ்ந்திருக்கும் சமுதாயத்திலும் அமையும். இதனைத் திருவள்ளுவரும்,

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்(கு)
இனத்துள தாகும் அறிவு

என்று கூறி விளக்குகிறார்.