பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


‘உன் நண்பன் பெயரைச்சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்ற பழமொழியும் இக்கருத்தினை வலியுறுத்துவதன்றோ! செழுந்தீயின் நடுவில் பச்சைப் பசுஞ்செடி ஒன்று பசுமையோடு வாழ இயலுமா? யோக்கியன் ஒருவன் கோடிக்கணக்கான தீயவர்களிடத்தில் அகப்பட்டால் அவன் யோக்கியனாகவே வாழமுடியுமா? கோடிக் கொருவராக வந்த வள்ளுவரை-இளங்கோவை-நாவரசரை எடுத்துக்காட்டுதல் பயனில்லை. சாதாரண மனிதரைப் பற்றியே சிந்திக்க வேண்டும்-பெரும்பான்மையான மக்களைப் பற்றியதாகவே நம் சிந்தனை அமையவேண்டும். அதுபோலவே அறநெறியும்-ஒழுக்க நெறியும் உருவாக வேண்டும். தனிமனித வாழ்வும் சமுதாய வாழ்வும் உடம்பும் உயிரும் போன்றது. தனிமனிதன் சமுதாயத்திலிருந்து தன்னை வேறுபடுத்தி எண்ணும்போதுதான் தன்னலம் இடம் பெறுகிறது. பொருளைப் பூட்டிக் காப்பவனாகிறான். தான் மட்டும் வாழ்வதையே பெரிதென எண்ணுகிறான். எனவே தனிமனிதனைச் சமுதாயத்தினின்றும் பிரிப்பதன் மூலம் தனிமனிதனுடைய தன்னலத்தை-ஆக்க உணர்ச்சியை வளர்க்கிறோம். தனிமனிதன்வேறு, சமுதாயம்வேறு அல்ல. உடலுக்கும் உயிருக்கும் உள்ளது போன்ற அமைப்பு தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் உள்ளது என்பே உண்மை.

தனிமனிதனைச் சமுதாய வாழ்வுக்கு அழைத்துச் செல்வது சமயம். ஆசைகள் இருக்கலாம். அது மனித இயற்கை! தன்னலம் பிறர் நலத்தின் மீது கை வைக்காதபடி தடுத்து நிறுத்தி ஒழுக்க நெறியைக் காட்டுவது சமயம்.

சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

என்றார் வள்ளுவர்.

திருக்குறள் கூறும் அறிவு வெறும் அறிவல்ல. படிப்பு வேறு, அறிவு வேறு. குறிப்பிட்ட வரலாற்றுண்மைகளை