பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று கூறுகிறார் நாவரசர். இரப்பவர்க்குக் கொடுக்கவே திருவருள் பொருள் தந்தது. அப்படி ஈத்து உவந்து வாழ்பவர்க்கே திருவருளும் உண்டு. கொடுத்து வாழாதவனுக்கு நரகத் துன்பமே உரியது. இது திருமுறைக் கருத்து. இத்தகு சமுதாய நலம் பேணும் சமய நெறிக்குப் பொதுவுடமை யாளரும் மாறாக இருக்க முடியாது. சமுதாய முன்னேற்றத் துக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

நம்முடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக சமய நெறி இல்லை. சமயத்தின் பேரால் உலவும் பிற்போக்குக் கொள்கைகளே, முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. இன்ப துன்பங்களை உணர்வைத் தொடும் வண்ணம் காட்டும் சமுதாயத்தில் ஈடுபடாதவர்கள் கோயிலில் இருக்கும் ஆண்டவன் சிலையில் ஈடுபாடு கொள்ள முடியுமா? அதனால்தான் தொண்டின் வழிப்பட்ட சமய வாழ்வே சிறக்க முடியும் என்று காட்டினார் சேக்கிழார் பெருமான்.

திருஞானசம்பந்தர் மூன்றாண்டிலேயே திருவருள் கைவரப் பெற்றவர். ஞானத்தின் திருவுருவாய்த் திகழ்ந்த அவர் திருவீழிமிழலையில் நிகழ்ந்த பஞ்சநிலை தீர்க்கத் தொண்டு செய்யவில்லையா? குழந்தையை இழந்து வாடியவர்களின் துன்பம் கண்டு உருகிக் குழந்தையை மீட்டுத் தரவில்லையா சுந்தரர்?

ஞானசம்பந்தர்-நாவுக்கரசர்-சுந்தரர் ஆகிய நம் சமயப் பெரியோரின் ஞான அனுபவம் உலகியலை மீறியதாக இல்லை என்பதை வரலாறு அறிந்தோர் உணர்வர். உலகைப் பகைமையிலிருந்து-சுரண்டலிலிருந்து வறுமையிலிருந்து காக்க-உலக ரீதியில் வலிமையுள்ள பொதுத் தத்துவம் தேவை; அத்தகு வலிமை பெற்ற தத்துவம் சமயத் தத்துவமேயாம். “உயிர்களிடத்தன்பிலார் ஈசனுக்கன்பிலார்” என்ற கருத்து உலகின் எல்லாச் சமயங்களுக்கும் பொது.