பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடியா? கொம்பா?

289


உலகத்தை ஒருமைப்பாட்டு நெறியில் அமைக்க ஒரே தலைமை உணர்வு தேவை. உலகியல் தலைவர்களை, குறுகிய நாட்டுப்பற்று-இனப்பற்று-மொழிப்பற்று-சமயப் பற்று ஆட்கொண்டிருக்கும். உலகத் தலைவன் விருப்பு வெறுப்பு அற்றவனாக-வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனாக சாதிச் சழக்கற்றவனாக-பொதுவானவனாக இருக்க வேண்டும். அவன் இறைவன் ஒருவனே!

அரசியலால் மனிதனைப் பக்குவப்படுத்த முடியாதா என்ற வினா எழலாம். சிறந்த அறிவுடன் செய்யப்பெற்ற அரசியல் சட்டத்தில்கூட கொலை செய்வது குற்றம் கொலை செய்யத் தூண்டுவது குற்றம்-கொலைக்கு உடந்தையாக இருப்பது குற்றம் என்றுதான் உள்ளதே தவிரக் கொலை செய்ய நினைப்பது குற்றம் என்று இருக்கிறதா?-இல்லை, இருக்கவும் முடியாது. நிகழ்ச்சிக்குரிய நினைப்பைக் குற்றமாக்க சட்டத்தால் முடியவில்லை! சட்டத்தின் நிலை அது!

ஆனால், சமயநீதி ஆழமானது - சிந்தனையோடு கூடியது - சிந்தனையைத் திருத்துவது - அகவாழ்வைத் திருத்துவது நினைப்போடு தொடர்புடையது - நினைப்பைத் திருத்தி வாழ்வது நிறைவாழ்வு என முழங்குவது சமய நெறி! செயலைத் திருத்துவது அரசியல்; சிந்தனையைத் திருத்துவது சமயம். சிந்தனையைத் திருத்தும் உண்மைச் சமயம்-சமுதாய வாழ்வில் உரிய இடம் பெறுமானால் - செயலைத் திருத்தும் அரசியலின் பொறுப்புக் குறையும்.

>நேராக மானிடர் பிறரைக் கொல்ல நினையாமல்
வாழ்ந்திட்டால் மாந்தர் ஏர் கட்டி உழுதல் வேண்டா
காரானநிலத்தைப் போய்த் திருத்தல் வேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா!
சீரான மழையுண்டு சிவன் செத்தாலன்றி மண்மேல் செழுமையுண்டு

என்பது கவிஞன் பாரதியின் வாக்கு.