பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நனைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து உணர்ந்து உணர்ந்து வழிபடுகிற வாழ்க்கையை நீங்கள் பெற வேண்டும்.

வழிபாடு என்பது இறைவனுடைய நெறியில் நிற்றல், வழிப்படுதல் என்பதை மறந்து விடக் கூடாது. குறைவிலாமையும் நீங்கள் பெற வேண்டும். பெறுதற்குரிய முயற்சியில் வழிபாட்டுநெறி நிற்க வேண்டும். அதற்குத் தாய்மொழி வழிபாட்டுநெறி நிறையத் துணை செய்யும். ஆன்மாவினுடைய தரத்தை உயர்த்திக் கொள்வதுதான் வழிபாட்டினுடைய நோக்கம். இந்த ஆன்மாவினுடைய தரத்தை உயர்த்திக் கொள்கின்ற பொழுது, நம்முடைய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும் தன்னுடைய ஆளுகைக்கு உட்படுத்தி, எதைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்க்கச் செய்து, எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கேட்கச் செய்து, தன்னுடைய ஐம்புலன்களையும், ஐம்பொறிகளையும், உள்ளே ஆற்றலைச் சேர்க்கின்ற மடைகளாக வைக்க வேண்டும். ஒரு பொழுதும் போக்கு மடைகளாக அவற்றை மாற்றக்கூடாது. வாழ்க்கையிலே உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவிற்கு அறிவையும், ஆற்றலையும், அருளார்ந்த அனுபவத்தையும் சேர்க்கின்ற மடைகள்தான். உள்ளே கொண்டு வந்து குவிக்கின்ற மடைகள்தான், நம்முடைய மெய், வாய், கண், மூக்கு, செவிகள் ஆகும். இவை பல சமயங்களில் தரமற்ற வாழ்க்கையின் காரணமாக மனித ஆற்றலைப் புறத்தே விடுகின்ற மடைகளாக மாறி, உடலை என்புக் கூடுகளாக மாற்றிக் கொண்டு வருகின்றன. இந்தப் பொறிகள், புலன்களை நாம் அழுக்கு உடையனவாக இல்லாமல், அழுக்காறு உடையனவாக இல்லாமல், ஆக்கத்தின் பாற்பட்டதாகச் செய்கின்ற முயற்சி வேண்டும். யானை போன்று வாழ்வதைவிட, அதற்குரிய நுட்பப் புலன்களை நாம் பெற வேண்டும்.