பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

347


சென்ற தடவை நான் இங்கே வந்தபொழுது, தமிழுக்கு வித்திட்டுப் போனேன்; தமிழுக்காக வந்தேன் என்று சொன்னார்கள். தான் சென்ற தடவையும் மலேசியா வந்த பொழுது, சமயத்திற்காக வந்தேன்; சமய அமைப்புகள் அப்பொழுது யாதொன்றும் இல்லை. இப்பொழுது அந்தச் சமய அமைப்புகள் எல்லாம் தோன்றிச் சமயம் செழித்து வளர்கிறது. நான் சென்றமுறை வந்த பொழுது இல்லாத திருமுறை இயக்கங்கள் வலிமை பெற்று வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, பல்வேறு நல்ல சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. சென்ற தடவை பல நகரங்களில் என்னுடைய கருத்துக்கு உடன்பாடு இல்லதவர்கள், என்னை வினாக்கள் கேட்டுத் திக்குமுக்காட வைத்தனர். பல இடங்களில் அந்த வினாக்களுக்கெல்லாம் பதில் சொல்லிப் போனேன். நண்பர் சண்முகவேல் அவர்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், இப்பொழுது வினாக்கள் கேட்பவர்கள் எல்லாம் நான் என்ன சொல்லுகிறேன் என்று கேட்கிற அளவுக்கு, மனம் மாறி இருக்கிறார்கள்; வளர்த்திருக்கிறார்கள். இது நாட்டினுடைய வளர்ச்சிக்கும் ஒருவருடைய தொண்டுக்கும் அடையாளமாக இருப்பது. நான் தமிழுக்காக வந்தேன் என்று சொன்னால், அடிகளார் தமிழுக்காகத்தான் பாடுபடுவார், சமயம் அவருக்கு இரண்டாந்தரந்தான் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகையினால் அப்படியொரு, மனப் போக்கை உண்டாக்கி விடக்கூடாது.

தமிழ் உயர்ந்ததாக இருக்கிறது என்பதற்காகத்தான் தமிழை நாம் நேசிக்கிறோம். தமிழ் என்னுடைய தாய் மொழியாக இருக்கிற ஒரே காரணத்திற்காக, தெரிந்தோ, தெரியாமலோ அல்லது விபத்தின் காரணமாகவோ, தமிழ் மொழி பேசுகிற ஒரு குடும்பத்தில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காக நான் தமிழை நேசிக்கவில்லை.