பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

361


மட்டுமே தின்று கொண்டிருக்கிறோம். மண் சுமப்பதற்கு யாருமே வருவதில்லை.

தமிழ்நாட்டுத் திருக்கோயில்களிலே பல திருக்குளங்கள் தூர்ந்து போயின; பல திருக்குளங்கள் இடிந்து கொண்டிருக் கின்றன. ஆண்டுக்கு ஒரு நாள் எல்லா சைவ அடியார்களும் மண் சுமக்க ஆரம்பித்தால், ஒரு திருக்குளத்தில் கூடப் பச்சைப் பாசி இருக்காது; வழுக்காது. அன்றைக்குச் சுந்தரர் பாடினார்.

வழுக்கி விழினும் நின்றிருப்பெயர் அல்லால்
மறுவார்த்தை அறியேன்

என்று. இந்த வழுக்கல் என்பது சமுதாய வழக்கல். ஒழுக்கத் தவறுகள். ஒழுகத் தவறுதல். ஆனால், இன்றைக்கு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ‘வழுக்கி வீழினும்’ என்று சொன்னால், பாசியில் வழுக்கி விழுந்தாலும், ‘நின் திருப்பெயர் அல்லால் மறுவார்த்தை அறியேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் பண்சுமந்த பாடல் பரிசுபெற என்று வருகிற பொழுதும், நண்பர்களுக்குத் தெரியும். சகோதரிகளுக்குத் தெரியும்-பண் என்பது தமிழுக்கே உரிய இசை என்பது. பண் என்ற சொல் தமிழுக்கு உரிய மரபு. தமிழ் இசைக்கு உரிய மரபு. செட்டி நாட்டரசர், தமிழ் இசை மேடைகளில் இருந்து மறைத்ததை, தமிழக இசை அரங்குகளில் பதிவு செய்து கொண்டு வந்தார்.

நாம் அதுபோலத் தமிழ்நாட்டிலே இறைவனுக்குத் தமிழிலே வழிபாடு செய்ய வேண்டும். இங்குத் தமிழிலே வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வதினால், சமசுகிரதம் வேண்டாம் என்று சொல்வது நம்முடைய நோக்கம் அல்ல; குறிக்கோளும் அல்ல. அல்லது வேறு எந்த மொழியும் கூடாது என்பதும் நோக்கம் அல்ல. நாம் என்ன பைத்தியக்காரர்களா? மாணிக்கவாசகர் அருளிச் செய்தது நமக்குத் தெரியவில்லையா?