பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யும் கேட்க வேண்டும். கேள்வியறிவு பேரறிவைத் தரவல்லது. பார்த்துப் பெறுமனுபவங்கள் பாரிற் சிறக்க வழிசெய்யும்; புத்தகத்தையே தொடாத-படிக்காத சில பாமரமக்கள் கேள்வியறிவினாலும் வாழ்க்கையனுபவத்தாலும் உயர்வதைப் பார்க்கிறோம். கல்வியாற் பெற்ற உண்மைகளோடு காட்சியாலும் கேள்விகளாலும் பெறும் கருத்துக்களும் உலகியல் வாழ்க்கைக்கு உறுதுணையாய் நின்று உதவக் கூடியன; கலைகள் காட்டும் கருத்துக்களிலே கழிப்பதைக் கழித்துக் கொள்வதைக் கொள்ள வேண்டும். உலகப் பெரியார் சொன்னதைப் போல் குணம் நாடிக் குற்றம் கொள்ள வேண்டும். வாழ்வுக்குப்பயன் அளிக்காத வாழ்வையே அழிக்கக்கூடிய சில கருத்துக்கள் சுவையுடன் வெளிப்படுத்தப் படுவதால் இளைஞர்களை அவை ஈர்த்து விடுகின்றன. கள்ளமோ களங்கமோ இல்லாத வெள்ளை உள்ளங்கள் அக்கருத்து வழிச்சென்று வாழ்வின் பயனை அனுபவிக்காது அல்லலுறுகின்றன. பிஞ்சு நெஞ்சங்களை நற்கருத்துக்கள் பிணிக்க வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஈதல், இசை படவாழ்தல், இன்னர்செய்தார்க்கு நன்னயம்செய்தல், காலத்தினாற் செய்யும் உதவி, அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ், அறனெனப்பட்டதே வாழ்வு, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் போன்ற வேண்டப்படும் கருத்துக்கள் கலைகளின்மூலம் புகுத்தப்படவேண்டும்.

நல்லெண்ணமும், நல்லுறவும் நற்சிந்தனையும் நாடு முழுவதும் பரவிப் பெருகக் கலைகள் பயன்படவேண்டும். அறிவைத் தேடிக் கொள்ளாதவர்கள் வாழமுடியாது அவதிப் படுகிறார்கள். அதிகம் படித்தவர்கள் திக்கு முக்காடுகிறார்கள். நடுத்தரப் பிரிவினர் இரண்டுங் கெட்ட நிலையில் இன்னலுறுகின்றார்கள். இவர்களுக்கெல்லாம் அறிவை, நிம்மதியை, சலனமற்ற நிலையைக் கலைகள் காட்ட வேண்டும். நாட்டிலே நாடகமேடைகளிலே மட்டும் கலையும் கலையைச் சார்ந்த கருத்துக்களும் மின்னி முழங்கிவிட்டாற்