பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏற்று மனை வாழ்வு வாழ வேண்டுமென்பதைக் காட்டவே சுந்தரர் மனைவாழ்வை வாழ்ந்து காட்டினார். சமணத்தைத் தடுத்துத் தமிழ் நாகரிகத்தைக் காத்த மங்கையர்க் கரசியாரை 'மங்கையர்க்குத் தனியரசி எங்கள் குலதெய்வம்' எனத் தொழுகிறார். வேறெவரையும் சேக்கிழார் பெருமான் தெய்வம் என விளம்பவில்லை. மங்கையர்க்கரசியையே கூறியுள்ளார். இவ்வாறாக மன்றுளார் அடியார் பெருமையினைப் பெரிய புராணம் பேசுகிறது. அன்று சமணர்கள் செயலைச் சம்பந்தர் தடுத்திராது போனால் இன்று நாமெல்லாமே கையில் கமண்டலம் ஏந்துபவர்களாய் இருந்திருப்போம்; நமது நாகரிகத்தைக் காப்பாற்றிய நல்லவர்களை நமது குலதெய்வங்களாக நாம் போற்ற வேண்டும்.

வேதம், ஆகமம் போன்றவற்றை ஆராய இப்பொழுது அவகாசம் இல்லை. காலவெள்ளம் ஓடுகிற ஓட்டத்தைப் பார்க்கிற பொழுது, நிம்மதியுடன் இருந்து நீண்ட நேரம் அவற்றை ஆராய முடிவதில்லை. ஆதலால் நம் நாயன்மார்கள் காட்டும் வழிச் சென்று சிறப்புறுவோம்.

அன்பினாலே அம்மையப்பனை அணுகி அணைத்துக் கொள்வோம். கண்ணப்பர்கூட மோகமாய் ஓடிச் சென்று தழுவி மோந்து கொண்டார். சாக்கிய நாயனார் எறிந்த கல்லைக் கூட இறைவன் ஏற்று அருள்புரிந்தார். திருப்பனந்தாளிலே தடாதகைப்பிராட்டியார் கொண்டு சென்ற மாலையை இறைவன் குனிந்து ஏற்றுக்கொண்டார். குங்குலியக்கலயநாயனார் குங்குலியத்தூபம் போட்டார். இவைகளிலிருந்து அன்பின் நெகிழ்ச்சியே ஆண்டவனுக்கு வேண்டப்படுகிறது என்பதை உணரமுடிகிறது. வழிபாட்டிற்குச் சாதி தடையாய் இருக்கக்கூடாது. பசித்தவன் சோறு பெற்றுப் பசி நீங்கி மகிழ்ச்சி நிறைவு கொள்ள வேண்டும். அதுபோலவே கோவிலுக்கு வருகிறவர்களும் அருள் வெள்ளத்தைப் பருகி, ஆன்மதாகம் நீங்கி நிறைவுபெற வேண்டும். அதற்கு மொழிச் சுவரோ, இனச்சுவரோ, சாதிச் சுவரோ தடையாயிருக்கக் கூடாது. அப்பர் சுவாமிகள் கூட