பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

55


இந்து சமயம் என்ற பெயரில் பல கடவுள்களை வழிபடும் வழக்கம் வராமல் பாதுகாப்பது அவசியம். சிறு தெய்வ வழிபாட்டை அறவே விலக்கல் வேண்டும். திருக்கோயில் வழிபாட்டில் தொழில் முறை கால்கொண்டவுடன் அருச்சகர்கள் தமது போட்டா போட்டிகளைக் கடவுள்களின் போட்டிகளாக்கி விட்டனர். அதன் காரணமாக “இந்தக் கடவுளை வழிபட்டால், அது கிடைக்கும்; இது கிடைக்கும்” என்ற பிரசாரங்கள்-விளம்பரங்கள் பெருகின, ஏன் ? புராணங்களே கூடத்தோன்றின. கடவுள் வழிபாட்டில் ஈடுபடுகின்றவர்கள் பல நலன்களை அடைகின்றனர் என்பது உண்மை. ஆயினும், அதனைக் காரணமாகக் கொண்டு வழிபாட்டை வணிக முறையாக்கக் கூடாது. இந்த மனப்போக்கு, சமயநெறியின் விழுமிய குறிக்கோளாகிய நிறைநலத்தைப்பெறத் துணை செய்யாது. கடவுளின் கருணை, காரணங்களாக அமையுமே தவிரக் காரியங்களாக அமையாது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். ஆதலால் மக்களின் இச்சைகளை-ஆசைகளைத் தூண்டி அவ்வழி நிகழ்த்தும் வழிபாடுகள் நெறியுடையனவல்ல; முற்றாகத் தவிர்க்கப்படவேண்டியவை; வெறுக்கத்தக்கவை. எந்த ஒரு தத்துவத்தில் - மூர்த்தியிடத்தில் நமக்கு ஈடுபாடு தோன்றுகிறதோ அந்த மூர்த்தியையே உயிர்க்கு நாயகனாகக் கொண்டு, நினைந்து நினைந்து, உள்ளக்கிழியில் உருவெழுதி, உணர்ந்து உணர்ந்து வழிபடுதல் வேண்டும். அப்போதுதான் வழிபாட்டின் பயனாகிய இன்ப அன்பு நிலையை எய்த முடியும்.

உயிர் - பெயர் விளக்கம்

மனிதன் ஒரு விந்தையான பிறவி, மானுடப் பிறப்பு உரிமைகளின் களம்: அனுபவங்களின் மையம், நெடிய வரலாற்றுக்கு மின்விசை. இந்த விந்தையான மானுடச் சாதி இல்லாது போனால், இயற்கைக்குப் பொருளேது? கடவுளுக்குத்தான் வழிபாடு ஏது?