பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதுபோலவே கடவுளும். அருவப் பொருள் உயிர்களின் துய்ப்பிற்குத் துணையாயிருக்கும் பொழுது உருவம் பெறுகிறது. விஞ்ஞான அடிப்படையில்கூட ஒலியலை உருவமில்லாதது. அந்த ஒலியலை வானொலி உருவ வடிவத்தின் வழி இயங்கும்பொழுது செவிப்புலன் அனுபவத்திற்கு வருகிறது. மின்னாற்றலும் அப்படியே! ஆக, உய்தி பெற வேண்டிய உயிர், மானுட வடிவத்திலும் உய்திக்குத் துணை நிற்கும் வழிபாட்டுக்குரிய திருமேனி வடிவத்திலும் கொண்ட உறவே திருக்கோயில் வழிபாடாக மலர்ந்தது. திருக்கோயில் வழிபாடு, மனிதன் கடவுளைத் தோழமை கொள்ளும் களமாகவே அமைந்தது.

வழிபாடு - விளக்கம்

வழிபாடு என்பது, ஓர் உயிர், தன் உயர்வுக்காகத் தானே செய்யும் ஒருவகை அறிவுப் பயிற்சி உணர்வுப் பயிற்சி. ஒருவர் அறிவுபெறப் பிறிதொருவர் படிக்க முடியாது. ஒருவர் பசிக்காகப் பிறிதொருவர் உண்ண முடியாது. ஆனால் விந்தை! இன்று மக்களுக்காகச் சிலர் வழிபாடு செய்கிறார்களாம். இஃது எங்கனம் சாத்தியம்: தண்ணீரைக் குடித்துச் செரித்த விதையால்தான் முளைக்க முடியுமே தவிர, அண்டாவில் தண்ணி இருப்பதினால் பக்கத்தில் உள்ள விதை முளைத்துவிடாது. தண்ணீரைக் குடிக்கும் இயல்பில்லாத விதை தண்ணில் கிடந்தாலும் முளைக்காது. “ஆண்டாண்டு அழுதாலும் அவளே பெறவேண்டும்” என்ற பழமொழி போல, ஒவ்வோருயிரும் தத்தம் உய்திக்குத் தாமே அழுது வழிபாடாற்ற வேண்டும். இதுவே, சமயத் தத்துவத்தின் அடிப்படை, கடவுள் வழிபாட்டின் நோக்கம்.

வழிபாட்டு வரலாறு

பழங்காலத்தில் உய்யுமாறறிந்த அனைவரும், அவரவர்களே வழிபாடு ஆற்றியிருக்கின்றனர். ஒருவருக்காக இன்னொருவர் வழிபாடு செய்யும் வழக்கம் பழங்காலத்தில்