பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொழி வழிப்பட்ட இயக்கமன்று

தாய்மொழியில் அருச்சனை என்ற இயக்கம் மொழி வழிப்பட்ட இயக்கமன்று. பிரார்த்தனை, பக்தி என்பன உயிரின் வளர்ச்சிக்குத் துணை செய்வன. உயிரின் வளர்ச்சி நெஞ்சத்துடன் தொடர்புடையது. ஆதலால் நெஞ்சினைத் தொட்டு உணர்வினைத் துண்டும் மொழிதான் வழிபாட்டு மொழியாக அமைதல் வேண்டும். அந்த வாய்ப்புத். தாய்மொழிக்கே மிகுதியும் உண்டு. இது பொதுவான கொள்கை.

தமிழ் மந்திரங்கள்

நமது நாட்டில் தமிழில் வழிபாடு என்று கேட்கும் கோரிக்கை பொது வகையால் மட்டுமன்று; உரிமை வகையினாலும் எழுந்தது. உலக மொழிகளிலே பக்திக்குரிய மொழி. தமிழ்தான் என்பது அறிஞர் முடிபு. பக்திக்குரிய அருமையும் எளிமையும் தமிழுக்கு இயல்பாகவே உண்டு. தமிழ், வழிபாட்டு மொழியாகவே வளர்ந்து வந்துள்ளமொழி. அது மட்டுமன்று. மந்திரங்களுக்கு மொழி வரையறையில்லை. நிறைமொழி மாந்தர் அருளிச் செய்பவை மந்திரங்கள்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திர மென்ப[1]

என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் “தானே என்று பிரித்தார். இவை தமிழ் மந்திரமென்றற்கு”[2] என்று எழுதுகின்றார். மாதவச் சிவஞான முனிவர் சமஸ்கிருதத்தின்பாலும் மிகப் பற்றுடையவர்: சமஸ்கிருதம் தேவ மொழி என்ற கருத்துடையவரே. ஆயினும் தாம் இயற்றிய காஞ்சிப் புராணத்தில் இறைவனை அகத்தியர் பூசித்த பொழுது தமிழ் மந்திரங்கள் கூறிப் பூசித்ததாகக் கூறுகிறார்.

  1. தொல். செய்யுள். 178.
  2. தொல். செய்யுள். 178. நச்சினார்க்கினியர் உரை.