பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

71


திருக்கோயில்களில் பல இன்றைக்கு இந்தத் திசையில் திரும்பிப் பணிகளை மேற்கொண்டுள்ளன.

அருள்நெறித் திருக்கூட்டம்

1952-ல் தமிழகத்தில் தோன்றிய சமய மறுமலர்ச்சி இயக்கமாகிய அருள்நெறித் திருக்கூட்டத்தின் தத்துவங்கள் - கொள்கைகள் இன்று எங்கும் எதிரொலித்து வருகின்றன. இன்று தமிழகத்தின் திருக்கோயில்கள், பள்ளிகளை நடத்துகின்றன; கல்லூரிகளை நடத்துகின்றன. சிறப்பாக மாண்புமிகு டாக்டர் கலைஞர் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசு இந்த வகையில் முனைப்புக் காட்டி வருகிறது. இத்துறை அமைச்சுப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு. கண்ணப்பன் இந்தப் பணிகளில் காட்டும் ஆர்வம் பாராட்டுதலுக்குரியது. ஆயினும் நம்முடைய சமுதாயத் தேவைக்குரிய அளவுக்குப் பணிகள் வளரவில்லை. இந்து சமய நிறுவனங்களின் வளத்திற்கேற்றவாறு வளரவில்லை. ஒரு புறம் நிறுவனங்கள் தங்கத்தில் தவழ்கின்றன. பிறிதொருபுறம் அச்சமய நிறுவனங்களைச் சார்ந்த மக்கள் புழுதியிற் கிடந்து புரளுகின்றனர். இந்த இடைவெளி நீக்கப் பட்டாலொழிய சமயத்தின் கொள்கை நிறைவேறாது. இந்துவாகப் பிறந்த ஒருவன் அனாதையாக விடப்படும் அவல நிலையிலிருக்கும் வரை நமது சமயம் ஏற்றம் பெற இயலாது. மனிதன் பெற்ற உணர்வினைப் பாதுகாப்பதே அவனுடைய செயல். தொண்டு இல்லாத வழி, பக்திக்கு ஏது பாதுகாப்பு? மக்கள் இல்லாதபோது ஏது சமயம்? மக்களைத் தழுவியவையாகச் சமய நிறுவனங்கள் இல்லாது போனால் அந்த நிறுவனங்களுக்கு ஏது உயிர்ப்பு? நடமாடும் கோயில்களைப் பேண வேண்டும்; அங்கும் கடவுளை எழுந்தருளச் செய்யவேண்டும். இது திருமூலர் இட்ட பணி.

படமாடுங் கோயிற் பகவற்கொன் றீயில்
நடமாடுங் கோயில் நம்பர்க்கங் காகா